Tamilnadu

“சிசிடிவி கேமிரா வாங்கியதில் ரூ.372 கோடிக்கு மேல் ஊழல்” : அம்பலமானது அ.தி.மு.க அரசின் மோசடிகள்!

தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளுக்கு சிசிடிவி கேமிரா வாங்கியதில் ரூ.372 கோடியே 84 லட்சத்து 46,600 ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச்செயலாளர் வீரபாண்டி அம்பலப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கைக்கு கே.வீரபாண்டி அளித்த பேட்டியில், “தமிழகம் முழுவதும் 12,524 ஊராட்சிகளுக்கு, 385 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு சிசிடிவி கேமரா வாங்கப்பட்டுள்ளது. ஒரு சிசிடிவியின் விலை ரூ.58,840 சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு சிசிடிவி பொருத்தியிருக்கிறார்கள்.

திருச்சிராப்பள்ளியில் உள்ள ஜாய் ஏஜன்சியில் 457 சிசிடிவி கேமரா ரூ. 26 கோடியே 75 லட்சத்து 2,780க்கு வாங்கப்பட்டுள்ளது. இதற்கு மூன்று கொட்டேசன் பெறப்பட்டுள்ளது. இந்த கொட்டேசனிலும் தேதி குறிப்பிடவில்லை.

திருச்சிராப்பள்ளி, வயலூர் பிரதான சாலை முகவரியில் உள்ள ஜாய் ஏஜன்சி ரூ.58,840, ஈரோடு செல்வா என்டர் பிரைசஸ் ரூ.62,270, கோயம்புத்தூர் எம்.எம்.எம்.ஏ என்டர்பிரைசஸ் ரூ.65,950 என விலை நிர்ணயம் செய்துள்ளன.

இறுதியில் திருச்சிராப்பள்ளி ஜாய் ஏஜன்சியில் சிசிடிவி கேமராக்களுடன் 79.9 செ.மீ. எல்.இ.டி தொலைக்காட்சி ஆகியவை ஓராண்டு வாரண்டியுடன் வாங்கியுள்ளனர்.

சிசிடிவி கேமரா குறித்து மொத்தமாக கொள்முதல் செய்த கடையில் விசாரித்தபோது, “ஆயிரக்கணக்கில் வாங்கும்போது ஒரு சிசிடிவியை ரூ.22 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரத்திற்குள் கொடுக்க முடியும். ஐந்து ஆண்டுகள் வாரண்டி கொடுக்க முடியும். ஒரு சிசிடிவி கேமரா, எல்.இ.டி டி.வி விலை ரூ. 30ஆயிரம் மட்டுமே.

ஆனால் அரசு ரூ.58,840-க்கு கொள்முதல் செய்துள்ளது. மொத்தம் 12,909 சிசிடிவி வாங்கப்பட்டுள்ளது.ஒரு சிசிடிவியில் மட்டும் பாதிக்குப் பாதி அதாவது ரூ28,840 ஊழல் நடந்துள்ளது. மொத்தம் ரூ.372 கோடியே 84 லட்சத்து 660 ஊழல் நடந்துள்ளது.

சிசிடிவி கேமரா வாங்கியது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள 445 ஊராட்சிகளுக்கு விற்பனை செய்த திருச்சிராப்பள்ளி ஜாய் கம்பெனியை தொடர்பு கொண்டபோது அவர்கள, மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் விஜயநாதனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு கூறினார். அவரிடம் கேட்டதற்கு உயரதிகாரி உத்தரவுப்படி செயல்படுத்தியிருக்கிறோம்; தரமான பொருள் வாங்கியிருக்கிறோம் என்றார்.

சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 457 சிசிடிவி வாங்கியதில் ரூ.12 கோடியே 85 லட்சம் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா தகவல் பலகையிலும் ஊழல் நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகளில் இரண்டாயிரத்திற்க்கு மேற்பட்ட கொரானா விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 235 கொரானா விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பலகைகளுக்கு ரூ.29 லட்சத்து 8 ஆயிரத்து 685 பட்டுவாடா செய்துள்ளனர். ஒரு தகவல் பலகைக்கு ரூ12,377 என பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

ஒரு தகவல் பலகையின் விலை ரூ.3,000 மட்டுமே. இதில் மட்டும் ரூ.18 கோடியே 75 லட்சத்து 4000 அளவிற்கு மாவட்ட அளவில் முறைகேடு நடந்துள்ளது. ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் இந்த ஊழலை ஆதாரப்பூர்வமாக வெளிக்கொண்டு வந்துள்ளார்.

இதுதவிர, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திலும் மாவட்ட அளவில் ரூ.12 கோடி ஊழல் நடந்ததாக அரசின் சமூக தணிக்கை கண்டறிந்துள்ளது. அதன் மீது தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்ற பின்பு அவர்களுக்கே தெரியாமல் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ரூ. 60 லட்சம் வீதம் 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய தலைவர்களுக்கோ, ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கோ தெரியாமால் முறைகேடுகள் அரங்கேறி வருகிறது இது குறித்தும் விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்து  வருகிறது? - மதுரை ஐகோர்ட் கேள்வி!