Tamilnadu

“டாஸ்மாக்கை திறப்பது போல், பொதுத்தேர்வை நடத்துவது எளிதல்ல” - அ.தி.மு.க அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து, பெற்றோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜூன் 15ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளதால் பொதுதேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி, தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, கொரொனோ கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. தேர்வுக்கு முன்பு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டியது அவசியம்.

பள்ளிகளை திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவெடுக்கலாம் என மே 13ம் தேதியே மத்திய அரசு அறிவுறுத்தியது. 30 சதவிகித மாணவர்கள் மட்டுமே சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டில் உள்ளனர். ஆகவே ஜூலை மாதம் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என வாதிட்டார்.

அரசு தரப்பில், மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதும் போது தனிமனித இடைவெளி போன்ற பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் சிக்கல் எழதா? ஒரு மாதம் தள்ளிவைக்காமல் தேர்வை நடத்த ஏன் அரசு அவசரம் காட்டப்படுகிறது?

Also Read: “மாணவர்களின் உயிரோடு விளையாடாதீர்!” : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்!

பொதுத் தேர்வுக்கான தேதியை அறிவித்த வேளையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வதை கவனிக்கவில்லையா அரசு? 35 ஆயிரம் பாதிப்பில் 26 ஆயிரம் பேர் வட சென்னையில் மட்டுமே உள்ளனர்.

ஜூன் 30 வரை ஊரடங்கு உள்ள நிலையில் எந்த நடவடிக்கை மேற்கொள்ள கூடாத நிலையில், 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய் துறை என அனைவரும் இக்காட்டான நிலைக்கு உள்ளாக வேண்டுமா? ஊரடங்கு காலத்திலேயே 10ஆம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம் உள்ளது என நினைக்கிறீர்கள்?

பள்ளிகளை திறப்பதையே ஜூலையில்தான் முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசு வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ள நிலையில், அதை நீங்களே மீறுவீர்களா ? 9 லட்சம் இளம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விசயம் இது. மாணவர்களின் தலைக்கும் மேல் கத்தி தொங்குவதை பார்த்து கொண்டிருக்க முடியாது என கருத்துக்களையும் கேள்விகளையும் அடுக்கடுக்காக முன்வைத்தனர்.

அதன் பின்னர் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 15 ம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்றும் 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. ஆகவே, கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம் அல்லது ஜூலை 2வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா ? என்பதை இன்று மதியம் 2:30 மணி அளவில் அரசு தரப்பு தெரிவிக்கும் படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Also Read: “கொரோனா பரவல் தீவிரமாகும் போது பொதுத்தேர்வு நடத்துவதா? அனைவரும் தேர்ச்சி என அறிவியுங்கள்” - வைகோ அதிரடி!