Tamilnadu

“தன்னார்வலர்களுக்கு தடை... RSS அமைப்புக்கு அனுமதி?” : மக்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய சென்னை மாநகராட்சி!

இந்தியாவில் பரவிவரும் கொரோனா தமிழகத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடுமுழுவதும் இரண்டாவது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித முன் ஏற்பாடுகளும் இன்றி அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் நாட்டு மக்கள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இப்படியிருக்கையில், ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்த உதவிகளும் தமிழகத்தில் பெரும்பாலான ஏழை மக்களுக்குச் சென்றடையவில்லை. மேலும் பாதுகாப்பு உபகரணமின்றி மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பல இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான தி.மு.க மற்றும் தி.மு.க அமைப்புகள் சார்பில் தூய்மை பணியாளர்கள், வெளிமாநிலத்தவர்கள், ஏழை எளியோர், ஆதரவற்றவர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் என எவரும் ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் தனியாக உதவிப் பொருள் வழங்க அனுமதி இல்லை எனவும், இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அரசின் இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் அரசின் அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் தடையை நீக்கக் கோரி தி.மு.க சார்பாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு தன்னார்வலருக்கு தடைவிதிக்கவில்லை என்றும், கட்டுப்பாடுகளுடன் அரசுடன் இணைந்து பணியாற்றவே சொன்னதாகவும், கொரோனா தொற்று யார் மூலம் எப்படி பரவுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால் தன்னார்வலர்கள் நேரடியாக உதவக் கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு மட்டும் சென்னையில் தொண்டு செய்ய சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியதாக தகவல் வெளியானது. மேலும் சில இடங்களில் நிவாரணப் பொருள்களைப் பெறும்பொது மக்களிடம் குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக பொய்யான பரப்புரையை மேற்கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அரசு முதலில் கூறியதுபோல நோய்த் தொற்று பரவாமல் தடுக்கவே அரசு தன்னார்வலர்களை அனுமதிக்கவில்லை என்றது. அப்படியானால் தற்போது பணியில் இருப்பவர்கள் மூலம் கொரோனா பரவாதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

அதனால் அரசின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சென்னை மாநகராட்சி ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்களை நீக்கிவிட்டு அனைத்துத் தரப்பு தன்னார்வலர்களையும் இணைத்துக்கொண்டு பணியாற்றவேண்டும் எனக் கோரியும் #chennaicorpremoveRSS என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.

இதனிடையே மக்களிடம் இருந்து எழுந்த எதிர்ப்பை அடுத்து அரசு பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், “ஏன் இந்தச் சூழலிலும் ஒரு குறிப்பிட்ட மத அமைப்புக்கு மட்டும் அனுமதி? இதிலும் அரசியல் செய்வது சரியா? அரசிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். சாதி, மதம் மொழி கடந்து உதவி செய்ய முன்வருபவர்களையும் ஒன்றிணைத்து அரசு பணிகளை மேற்கொள்ளவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஏழைகளின் பசியைப் போக்க 8 லட்ச ரூபாய்க்கு நிவாரண பொருட்கள் வழங்கிய தி.மு.க நிர்வாகி: குவியும் பாராட்டுகள்!