Tamilnadu

“டெண்டர் முறைகேடு வழக்கை திசைதிருப்பவே என் மீது அவதூறு வழக்கு” - உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு!

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மாநகராட்சி டெண்டர் முறைகேடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தினால் தன் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது எனக் குறிப்பிட்டு வழக்கை ரத்து செய்ய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

உள்ளாட்சித் துறை ஊழல் துறையாக மாறிவிட்டதாகவும், அத்துறையில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் ஊழலுக்குத் துணை போயிருப்பதாகவும், எம்.சாண்ட் வாங்கியதில் ரூபாய் 1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்தவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் வேலுமணி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜாராக நேற்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், மாநகராட்சி டெண்டர்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அறப்போர் இயக்கம் பல தகவல்களை வெளியிட்டது. இதேபோல் ஆற்றுமணலுக்குப் பதிலாக எம்.சாண்ட் பயன்படுத்தி அரசு டெண்டர்களில் ரூபாய் 1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின.

அவற்றின் அடிப்படையிலும், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலும், ஊழல் நடந்திருப்பது குறித்து மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அறிக்கை வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேட்டு வழக்கை, திசைதிருப்பும் நோக்கிலேயே தன் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

எனவே அமைச்சர் வேலுமணி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யவேண்டும் என்றும் அந்த வழக்கில் பிப்ரவரி 24ஆம் தேதி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Also Read: ஊழல்களில் எடப்பாடியாருக்கும் பொறுப்பு என்று பகிரங்கமாக அறிவிக்கிறாரா வேலுமணி? - மா.சுப்பிரமணியன் அறிக்கை!