Tamilnadu

திமிர் பேசிய வட இந்தியர்கள் - செங்கல்பட்டு டோல்கேட்டை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

தமிழகத்தில் செயல்படும் சுங்கச்சாவடிகளில் தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சனை எழுந்தவண்ணமாக உள்ளது. குறிப்பாக வாகன ஓட்டிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் மரியாதை குறைவாக நடத்துவது என பல பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் கூட கரூர் மாவட்டம் மணவாசி டோல்கேட் வழியாக ஈரோடுக்கு காரில் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதியிடம், அனுமதி அட்டை இருந்தும் சுங்கக் கட்டணம் செலுத்தக்கோரி அவரிடம் ஊழியர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் வகையில் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த சம்பவம் முடிந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில், செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி ஊழியர்கள், அரசு பேருந்து ஓட்டுனருடன் மோதலில் ஈடுபட்டதால் சுங்கச்சாவடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து நேற்று சென்றுள்ளது. செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி வந்தடைந்த போது சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கக் கட்டணம் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக முற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் வழியை மறித்து பேருந்தை நிறுத்தியுள்ளார். இதன் காரணமாக அப்பகுதியில் 5 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது பேருந்தில் இருந்த சில பயணிகள் ஓட்டுநருக்கு ஆதரவாக பேசினார். இதனால் முற்றிய வாக்குவாதம் கைகலப்பாக மாறி பொதுமக்கள் சுங்கச் சாவடியை அடித்து நெறுக்கி சூரையாடியனர்.

இதில், சுங்கச்சாவடி பூத், சிசிடிவி கேமராக்கள், ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனையடுத்து தகவல் அறிந்துவந்த போலிஸார் இருதரப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து போக்குவரத்தை சீர்படுத்தினர்.

Also Read: முன்னாள் எம்.எல்.ஏவிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சுங்கச்சாவடி ஊழியர் : கரூர் அருகே பரபரப்பு!

இந்த சம்பவத்தில் அரசு ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்களை போலிஸார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரனூர் சுங்கச்சாவடியில் ஊழியர்கள் அடிக்கடி இதுபோல தகராரில் ஈடுபடுவதாக வாகன ஓட்டிகளும் குற்றம் சாட்டிவருகின்றனர்.