Tamilnadu

புத்தகம் வெளியிட தடை; ஊறுகாய் விற்க அனுமதி: எடப்பாடிக்கு 75 லட்சத்துக்கும் மேல் விசுவாசம் காட்டும் பபாசி!

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 43-வது சென்னை புத்தகக் காட்சியையொட்டி பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்து புத்தகங்களை விற்பனை செய்துவந்தார் மூத்த பத்திரிகையாளரும் மக்கள் செய்தி மையம் என்ற பதிப்பகத்தின் உரிமையாளருமான அன்பழகன். அவரது அரங்கில் அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அரங்கை காலி செய்யும்படியும் புத்தக கண்காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) அன்பழகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், புத்தக அரங்கை அகற்ற மறுத்து அதிகாரிகளை தாக்கியதாக பபாசி தரப்பில் அன்பழகன் மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அவரை போலிஸார் கைது செய்தனர். அவரை வரும் 24ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்பழகன்

அன்பழகன் அமைத்த புத்தக அரங்கில், அ.தி.மு.க அரசின் ஊழல் தொடர்பான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அ.தி.மு.க அரசின் ஊழல்களை வெளிக்கொணரும் புத்தகங்களை விற்பதால், ஆளுங்கட்சியின் அழுத்தத்தின் பேரில் அவரது அரங்கை தடை செய்து, பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அ.தி.மு.க அரசு மற்றும் பபாசி இணைந்து நடத்திய இந்த எதேச்சதிகார செயல் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பபாசியின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, தற்போது புத்தக அரங்குகளில் புத்தக வெளியீடுகளை நடத்தக்கூடாது எனவும் பபாசி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை புத்தகக் காட்சியை திட்டமிட்டு உருவாகும் பெரும்பாலான புத்தகங்களின் வெளியீட்டை கண்காட்சி அரங்குகளில் நடத்துவதே வழக்கம். புத்தக வெளியீட்டு விழாவுக்கு வரும் வாசகர்கள் மற்ற அரங்குகளுக்கும் சென்று புத்தகங்கள் வாங்கக்கூடும் என்பதால் இது அனைவராலுமே ஆதரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான், காட்சி அரங்கில் புத்தக வெளியீட்டுக்கு தடை போட்டுள்ளது பபாசி. இது பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. அரங்குக்கு வெளியே உணவகங்கள் மட்டுமல்லாது ஊறுகாய் விற்பனைக்கும் கூட அனுமதி அளித்திருக்கும் பபாசி, புத்தக வெளியீட்டுக்கு தடை விதித்திருப்பது வேடிக்கையாக இருப்பதாக எழுத்தாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புத்தகக் காட்சிகளை நடத்தும் பபாசிக்கு ஆண்டுதோறும் 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருப்பதற்காக, இந்தளவுக்கு பபாசி அமைப்பு எடப்பாடி பழனிசாமிக்கு விசுவாசம் காட்டக்கூடாது எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: 750 அரங்குகள்.. லட்சம் தலைப்புகள்..‘வாசிப்பே விடுதலை’ என்கிற முழக்கத்தோடு ஜன.9ல் சென்னை புத்தக கண்காட்சி!