
கரூர் கொடுந்துயரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய பொறுப்பற்ற பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். மக்களின் துயரத்தைக் கூட அவர் தனது இடைத்தேர்தல் லாபத்திற்காகப் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில், கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம் என்ற விவரம் தெரியாதவரா எங்கள் தமிழ்நாட்டின் முதல்வர்? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அப்பாவு வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கண்காணிப்பில் CBI-விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம் என்ற விவரம் தெரியாதவரா எங்கள் தமிழ்நாட்டின் முதல்வர்? இது பதவி பிரமாணத்திற்கு எதிரான குற்றம் என்று முதல்வருக்கு தெரியாதா?
41 பேர் கொலைக்கு காரணம் காவல்துறைதான் என்ற அபாண்டத்தை அள்ளி வீசுவது முதல்வருக்கு அழகா ? இதனை இருமுறை டெல்லி CBI விசாரணைக்கு சென்ற போது மேற்படி குற்றச்சாட்டை தெரிவித்தீர்களா ?
தமிழக முதல்வர் அரசு தலைமை செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு ஆட்சி நடத்துகிறாரா ? அல்லது சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வழிகாட்டுதலோடு ஆணவ வசனம் பேசி வருகிறாரா?
சட்டமன்றத்தில் Party FUND என்று சொன்னதும் தி.மு.க வினர் ஓடி விட்டார்கள் என்று வாய்மொழியாகவும், உடல் மொழியாகவும் நக்கலடிக்கும் CM sir தேர்தலுக்கு முன் உங்கள் சட்டமன்ற வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் ரூபாய் 2 கோடி முதல் ரூபாய் 10 கோடி வரை Party Fund-பெற்றுக்கொண்டுதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக உங்கள் ரசிகர்களும், த.வெ.க கட்சியினரும் புலம்புவது உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா ? இது Party FUND இல்லையா? இதுதான் தூய கட்சி ஆட்சியின் லட்சணமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.






