Tamilnadu

“பெண் மருத்துவரை எரித்துக் கொன்ற குற்றவாளிகளை போலிஸார் என்கவுன்டர் செய்தது எப்படி?" : பரபர தகவல்கள்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா கடந்த 27-ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 லாரி ஓட்டுநர்கள் அந்த பெண்ணை முன்கூட்டியே திட்டமிட்டு கொடூரமாக கொலை செய்திருப்பதாக சம்ஷாபாத் போலிஸார் தெரிவித்திருந்தனர்.

மேலும், சம்பவம் நடைபெற்ற அன்று, இருசக்கர வாகனம் பஞ்சராகிவிட்டதால் மருத்துவமனையில் இருந்து வரும் வழியில் வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்த பிரியங்காவை 4 பேரும் நோட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே மதுபோதையில் இருந்த 4 பேரும் அவரை கடத்துவதற்கு திட்டம் ஒன்றையும் தீட்டியதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், பிரியங்காவின் வாகனத்தையே அவர்கள் 4 பேரும் தான் திட்டமிட்டு பஞ்சராக்கியுள்ளனர். அந்த வண்டியை தள்ளிக்கொண்டு வந்தபோது 4 பேரில் 2 பேர் உதவுவதாகக் கூறி, பிரியங்காவை தாக்கி ஆள் இல்லாத இடத்திற்கு கடத்திச் சென்றிருக்கிறார்கள்.

அங்கு 4 பேரும் பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும், பின்னர் உடலை லாரியிலிருந்த தார்ப்பாயில் சுற்றி லாரியில் எடுத்துச் சென்று கட்டபள்ளி என்ற இடத்தில் பாலத்தின் கீழ் எரித்துக் கொலை செய்துள்ளனர்.

குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த போலிஸார், குற்றவாளிகள் 4 பேரையும் இன்று அதிகாலை ஐதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று, கால்நடை மருத்துவரை எப்படி கொலை செய்தார்கள் என்பதை நடித்துக் காட்டச் சொல்லியுள்ளனர்.

அதன்படி, செய்துகாட்டும் போது திடீரென 4 பேரும் வெவ்வெறு திசையில் ஓட முயன்றுள்ளனர். அப்போது அருகில் காவலில் இருந்த போலிஸாரையும் இடித்து தள்ளி தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது போலிஸார் குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததையும் மீறி அவர்கள் வேகமாகத் தப்பித்து ஓடியுள்ளனர்.

இதனையடுத்து 4 பேரையும் போலிஸார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர், வரும் வழியிலேயே குற்றவாளிகள் ஒருவருக்கு ஒருவர் சைகயால் பேசிக்கொண்டதாகவும், 4 பேரும் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

வி.சி.சஜ்ஜனார்

மேலும், சம்பவம் நடந்த இடம் காட்டுப்பகுதியாக இருந்ததால், அங்கிருந்து தப்பித்தால் பிடிக்கமுடியாது என நினைத்து நான்கு பேரும் தப்பித்து ஓட நினைத்துள்ளனர் என்று போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே, ஐதராபாத் போலிஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனார் அதிகாரப்பூர்வமாக இந்த தகவலையும் உறுதிப்படுத்தியுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட முகமது ஆரிப், ஜொள்ளு நவீன், ஜொள்ளு சிவா மற்றும் சின்ட குண்டா சென்னகேசவலு ஆகியோர் இன்று அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஷாட்நகரின் சத்தன்பள்ளியில் நடந்த போலிஸாருக்கும், குற்றவாளிகளுக்கும் இடையேயான மோதலில் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டனர் என்றும், மேலும் சம்பவ இடத்தில் தான் சென்று ஆய்வு செய்தாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read: ஐதராபாத்தில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற 4 பேர் சுட்டுக் கொலை -போலிஸார் அதிரடி!