Tamilnadu

கஜா புயல் நிவாரணமாக வந்த அரிசி மூட்டைகளை குழிக்குள் பதுக்கி வைத்த அதிகாரிகள் - 500 கிலோ அரிசி வீணான அவலம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு வந்த கஜா புயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை கடுமையாக பாதித்தது. குறிப்பாக புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதிகளில் புயலின் கோரத் தாண்டவத்தில் தென்னந்தோப்புகள், மரங்கள் சாய்ந்தன பல வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால் மக்கள் உணவின்றி, குடிக்கத் தண்ணீர் இன்றியும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் சென்றன. ஒரு சில நிறுவனங்கள் சார்பில் 10 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகளும் மக்களுக்கு நிவாரண உதவியாக வழங்கப்பட்டன.

தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கிய அரிசி மூட்டைகளில் அ.தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டி வழங்கப்பட்ட கேவலமான நிகழ்வுகளும் நடந்தன. இந்நிலையில், தமிழக அரசு தற்போது வரை கஜா புயலால் சேதமடைந்த மக்களுக்கு உரிய இழப்பீடு தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அரசர்குளம் கீழ்பாதி கிராம சேவை மையம் உள்ளது. இந்த மையத்தின் பின்புறத்தில் கடந்த சில நாட்களாகத் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அந்த இடத்தில் சென்று பார்க்கும் போது 10 கிலோ எடையுள்ள சுமார் 50 மூட்டைகள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்தன.

அவைகள் கஜா புயலின் போது வழங்கப்பட்ட அரிசி மூட்டைகள் எனவும், தொடர் மழையின் காரணமாக அவை அழுகி துர்நாற்றம் வீசியதும் அம்பலமானது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த ஊர் மக்கள் அனைவரும் பசியால் தவித்த மக்களுக்கு சில நிறுவனங்கள் வழங்கிய அரசியை அதிகாரிகள் பதுக்கி வைத்ததாக குற்றம் சாட்டினர்.

மேலும் பதுக்கிவைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்தன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “கஜா புயலின்போது மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் கொடுத்த அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை அங்குள்ள கிராம சேவை மையத்தில் அதிகாரிகள் இறக்கி வைத்துள்ளனர்.

சில நாட்களில் பொருட்கள் முடிந்துவிட்டது என்றும், மறுபடியும் வரும் போது தரப்படும் என்று சொல்லி மையத்தை பூட்டிவிட்டார்கள். அதற்குப் பிறகு அந்த மையம் திறக்கப்படவே இல்லை.

இதில் தொடர்புடைய அதிகாரிகள் யார் சொல்லி இதுபோல அரசியைப் பதுக்கி வைத்தனர் என்பதை தெளிவுப்படுத்தவேண்டும். இதுபோல் மனிதாபிமானம் இல்லாமல் கஜா நிவாரணப் பொருட்களை பதுக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.