Tamilnadu

மாணவி ஃபாத்திமா தற்கொலை : ''விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்" - சென்னை ஐ.ஐ.டி

கடந்த 8ம் தேதி கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஃபாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.

தனது தற்கொலைக்கு முன்பு எழுதிய குறிப்பில், தனது தற்கொலைக்கு உதவிப் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் தான் காரணம் எனவும், அவர்கள் மதரீதியாக தவறாக பேசியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் கேரள மற்றும் தமிழக மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மாணவியின் மரணம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்திட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், மாணவர் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், சமூக வலைத்தளங்களிலும் மாணவி பாத்திமா தற்கொலைக்கு உரிய விசாரணை வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.