Tamilnadu
"சி.சி.டி.வி காட்சிகளை கொடுக்க மறுக்கிறது ஐ.ஐ.டி" - மகள் பாத்திமாவின் மரணத்துக்கு நியாயம் கேட்கும் தந்தை
கடந்த 8ம் தேதி கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஃபாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.
தனது தற்கொலைக்கு முன்பு எழுதிய குறிப்பில், தனது தற்கொலைக்கு உதவிப் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் தான் காரணம் எனவும், அவர்கள் மதரீதியாக தவறாக பேசியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்பட்டிருந்தது.
சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் கல்லூரி வளாகத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரள மற்றும் தமிழக மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாத்திமாவின் மரணத்துக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனே காரணம் என அவரது தந்தை லத்தீப் குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள மாணவி பாத்திமா லத்தீப் உயிரிழந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும் என மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''பாத்திமா மரணத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி உறுதியளித்துள்ளார். காவல்துறை டி.ஜி.பி அளித்த உறுதியை ஏற்று நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்.
என்னுடைய மகள் எந்த சம்பவம் நடந்தாலும், அதை கடிதமாக எழுதி வைப்பார். இந்த சம்பவம் குறித்து அனைத்து விவரங்களையும் தெளிவாக அவர் எழுதி வைத்துள்ளார். ஆனால் அதுகுறித்து முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிபடப்படவில்லை. என்னுடைய மகள் தினந்தோறும் ஒவ்வொரு நாளும் இரவில் என்னுடன் பேசுவார் ஆனால் சம்பவத்தன்று அவர் என்னிடம் பேசவில்லை.
எனது மகள் பாத்திமாவின் மரணம் தற்கொலை போன்று தெரியவில்லை. என் மகள் தற்கொலை செய்வதற்கு அங்கு எவ்வாறு கயிறு கிடைத்தது என்று ஒரு பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. அவருடைய அறைக்கு நாங்கள் வரும் முன்பு பலர் வந்துள்ளனர். அவரது அறைக்கு சீல் வைக்கப்படவும் இல்லை.
என் மகளின் தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் முழுக்காரணம். மதிப்பெண் விவகாரத்தில் பாத்திமாவுக்கும் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனுக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. என் மகள் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி ஐ.ஐ.டி கேண்டீனில் அமர்ந்து ஒரு மணிநேரம் அழுதுள்ளார்.
சி.சி.டி.வி காட்சிகளை பலமுறை கேட்டும் எங்களுக்கு நிர்வாகம் அதை அளிக்கவில்லை. என் மகள் மரணம் குறித்து இதுவரையில் ஐ.ஐ.டி கல்வி குழுமத்தை சேர்ந்த யாரும் எங்களை தொடர்பு கொண்டு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. என் மகளுக்கு எற்பட்ட கொடுமையை போல வேறு யாருக்கும் இனி நடக்கக்கூடாது'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !