Tamilnadu

7-நாட்களாக சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு: வாய் திறக்காமல் மவுனம் காக்கும் அ.தி.மு.க அரசு!

தலைநகர் டெல்லியில் வழக்‍கத்தை விட காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. காற்றின் தர அளவு பன்மடங்கு உயர்ந்து 625 என்ற அளவை அடைந்ததால், மிக மிக மோசமான நிலையை டெல்லி எட்டியது. இத்தகைய பாதிப்புக்குள் சென்னை நகரம் தற்போது சிக்கியுள்ளது.

குறிப்பாக, சென்னையில் தொடர்ந்து 7-வது நாளாக காற்று மாசு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் தனியார் காற்று மாசுபாடு நிகழ் நேர காண்காணிப்பு மையங்களின் ஆய்வில் சுவாசிக்க தகுந்த அளவான தரக்குறியீடு 100 என்பதை விட அதிகமாக காற்று மாசுபாடு பதிவாகியுள்ளது.

அதன்படி நேற்று ஆலந்தூரில் 101, வேளச்சேரியில் 113, மணலி 182 என ஒவ்வொரு பகுதிகளிலும் காற்று மாசு அதிகமாக இருந்தது. சென்னையில் 7வது நாளாக தொடர்ந்து காற்று அளவு அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓ.எம்.ஆர் சாலை

மேலும், இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், “தமிழக அரசு சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறது. இங்குள்ள அமைச்சர்கள், செயலாளர்கள் காற்று மாசு இல்லை என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.

சென்னையில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறதே தவிர குறைந்த மாதிரி தெரியவில்லை. ஆனால் தமிழக அரசு காற்று மாசுவில் இருந்து மக்களை காக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காற்று மாசு எதுவும் இல்லை என்று தான் தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால், அதை தடுக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் கூறிவருகின்றனர்.