Tamilnadu

“வள்ளுவர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மறைந்து மண்ணோடு போனபின்பும் வள்ளுவம் வாழும்” - கனிமொழி ட்வீட்!

தமிழக பா.ஜ.க-வினர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசி, மத அடையாளமிட்டு திருவள்ளுவரை அவமதித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழகத்தில் திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலையை பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் பராமரித்து வருகின்றது. இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் அந்தப் பகுதிக்கு வந்த சில சமூகவிரோதிகள், திருவள்ளுவர் சிலை மீது சாணத்தையும், கருப்பு மையமும் பூசிவிட்டுச் சென்றுள்ளனர்.

திருவள்ளுவர் சிலையை அவமதிக்கும் வகையில் நடந்த சமூக விரோதிகளின் இழிசெயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் கூடிய தமிழ் ஆர்வலர்கள், தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள தி.மு.க எம்.பி., கனிமொழி, “வள்ளுவர் சிலையை சேதப்படுத்தலாம். ஆனால் அதைச் செய்த மூடர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். திருவள்ளுவர் என்பவர் சிலை மட்டும் இல்லை. வள்ளுவம் என்பது வாழ்வியல் அறம். சிலையை சேதப்படுத்தியவர்கள் மறைந்து மண்ணோடு போனபின்பும் வள்ளுவம் வாழும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.