Tamilnadu

1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் : அதிமுக பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீயின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மனு!

கடந்த செப்டம்பர் 12ம் தேதி சென்னை பள்ளிக்கரணையில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மகனின் திருமணத்திற்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, பேனர் வைத்த ஜெயகோபாலை 12 நாட்கள் கழித்து கைது செய்தது. இந்நிலையில், சுபஸ்ரீயின் தந்தை ரவி தனது மகளின் உயிரிழப்புக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்காததாலும், நடவடிக்கை எடுக்காத காரணத்தாலும் தான் தனது மகள் இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது மகளின் மரணம் தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.