Tamilnadu

“அரசு பேருந்தில் போலிஸார் இலவச பயணம் செய்யக் கூடாது” என அறிவுறுத்துமாறு போக்குவரத்துத் துறை கடிதம்!

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் போலிஸ்காரர்கள் இலவசமாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்துமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம் கடிதம் எழுதியுள்ளது.

அண்மையில் நெல்லையில் இருந்து அரசு பேருந்தில் பயணித்த ஆயுதப்படை காவலர்கள் இருவர் டிக்கெட் எடுக்காமல் இருந்ததால் வாரண்ட் எழுதித் தருமாறு கேட்ட பேருந்து நடத்துநரை, காவலர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. அதனையடுத்து, ஆயுதப்படை காவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அதேபோல், கடந்த மாதம் கடலூரிலும் அரசு பேருந்தில் ஏறிய காவலர் டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் கண்டக்டர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

போலிஸாரின் இதுபோன்ற அதிகார துஷ்பிரயோக செயல்களால் பொதுமக்களுக்கு அவர்கள் மீது அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மேற்கண்ட சம்பவங்களை குறிப்பிட்டு காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளது போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம்.

அதில், “அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய காவல்துறையினருக்கு தமிழக அரசும், காவல்துறையும் அனுமதி வழங்கவில்லை என்பதை தெரியபடுத்தி, இனி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்து வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.