Tamilnadu

TNPSC தேர்விலிருந்து மொழித்தாள் நீக்கம்:பிற மாநிலத்தவர்கள் தமிழக அரசுப் பணியில் சேர வழி வகுக்கும்-கனிமொழி

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளது. மொழித்தாளுக்கு பதிலாக, பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது.

இது தேர்வர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் தி.மு.க நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூலில் பக்கத்தில், ''டி.என்.பி.எஸ்சி நடத்தும், குரூப் 2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப் பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசுப் பணியில் சேருவதற்கே இது வழி வகுக்கும். தமிழக அரசு உடனடியாக இந்நடவடிக்கையை கைவிட வேண்டும்'' எனத்தெரிவித்துள்ளார்.

மேலும், ''டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதற்கட்ட தேர்வில் இருந்து தமிழ் மொழியை கைவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டிலிருந்து வரும் இளைஞர்களின் வாய்ப்புகளை பாதிக்கும் மற்றும் தமிழ் மொழி தெரியாதவர்களுக்கு தமிழக அரசு வேலைகளைப் பெற வழி வகுக்கும். தமிழக அரசு உடனடியாக இந்த நடவடிக்கையை கைவிட்டு பழைய பாடத்திட்டத்திற்கு திரும்ப வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.