Tamilnadu

“மாணவர் கிருபா மோகன் நீக்கம் ஏன்?” - சென்னை பல்கலைக்கழகம் விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 

மாணவர் கிருபா மோகன் சென்னை பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறையில் முதுகலைப் பாடப்பிரிவில் சேர்ந்து படித்துவந்தார். அப்போது அவர் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தில் செயல்பட்டு வந்திருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு கிருபா மோகன் தகுதிச்சான்றிதழ் கொடுக்கவில்லை என்று அவரது சேர்க்கையை ரத்து செய்வதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரித்ததில், ஆளுநர் மாளிகை கொடுத்த அழுத்தத்தின் பேரில் மாணவரை நீக்கியதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. பின்னர், இதுகுறித்து கிருபாமோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

2019-20 கல்வியாண்டில் சென்னை பல்கலைகழகத்தில் உள்ள தத்துவவியல் துறையில் புத்திசம் படிப்பதற்காக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்து ஜூலை மாதம் 31 முதல் படிப்பைத் தொடர தனக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த இரண்டு மாதங்களாக படிப்பைத் தொடர்ந்து வந்த நிலையில், என்னுடைய சேர்க்கை நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

உரிய கல்விச்சான்றுகள் மற்றும் சேர்க்கைக் கட்டணம் செலுத்திய பின்னர், தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் என எதுவும் என்மீது இல்லாத நிலையில் உரிய காரணமும் கூறாமல் தன்னுடைய சேர்க்கை நிராகரிக்கப்பட்டதாக துணைவேந்தர் தன்னிச்சையாக அறிவித்துள்ளார். சேர்க்கை நிராகரிக்கப்பட்டதற்கு "பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தில்" தான் இருப்பதும் காரணம் என துணைவேந்தர் பத்திரிகைகளில் தெரிவித்துள்ளார்.

அதனால், உரிய காரணம் இன்றி தன்னுடைய சேர்க்கை நிராகரிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும். தன்னை மீண்டும் பல்கலைகழகத்தில் சேர்ந்து படிக்க அனுமதி வழங்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவரின் கல்வி பாதிக்கப்படுவதால் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதை ஏற்காத நீதிபதி, பல்கலைக்கழகம் தரப்பிலிருந்து விளக்கம் கேட்காமல் எந்த உத்தரவையும் தற்போது பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்து சென்னை பல்கலைகழகம் 24ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.