Tamilnadu
டன் கணக்கில் சிக்கிய குட்கா : தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தல் தமிழகத்தில் தாராளம்!
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையிலும், அதன் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளிலும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கரூர் முருகநாதபுரம் பகுதியில் கர்நாடகாவைச் சேர்ந்த சாவ்லா ராம் என்பவர் மகாதேவ் ஏஜென்ஸிஸ் என்ற பெயரில் மொத்த கொள்முதல் வியாபாரக் கடை நடத்தி வருகிறார். வியாபாரத் தேவைக்காக கரூர் சின்ன ஆண்டான் கோவில் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடோனாக பயன்படுத்தி வந்துள்ளார்.
அந்த குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்களை வைத்து வியாபாரம் செய்துவருவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த குடோன் பகுதியை போலிஸார் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று ஒரு மினி டெம்போவில் சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து குடோனை சுற்றிவளைத்த போலிஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, மூட்டை மூட்டையாக குட்கா பொருட்களை கடத்தி வந்து குடோனில் இறக்கியது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ஹர்சன், சுதன் ஆகிய இருவரையும் போலிஸார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மினி டெம்போவை ஓட்டி வந்த டிரைவர் பார்த்திபன் தப்பி ஓடிவிட்டார். குடோனில் இருந்து சுமார் 1 டன் அளவுள்ள குட்காவை போலிஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று சென்னையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் பகுதிகளில் 1.5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. குட்கா போதைப் பொருட்களை விற்க பள்ளி, கல்லூரி மாணவர்களை இந்தக் கும்பல் பயன்படுத்தி வந்ததாகவும் தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!