Tamilnadu

நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை மாநில அரசு மறைத்தது ஏன் - உயர்நீதிமன்றம் சுருக் கேள்வி

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீட் விலக்கு மசோதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச்சங்கம் உள்பட 4 தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வழக்கு கடந்த ஜூலை 16ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ”தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாக்கள், நிராகரிக்கப்பட்டு 2017ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியே தமிழகத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது” என உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துது.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை பெற்றுக் கொண்டு, 2017 அக்டோபரில் 25ல் தமிழக அரசு ஒப்புகை தெரிவித்துள்ளதாக, மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்தது. மேலும் என்ன காரணங்களுக்காக மசோதா திருப்பி அனுப்பப்பட்டது என விளக்கம் கேட்டு, தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

”மசோதா திருப்பி அனுப்பப்பட்டது பற்றி மாநில அரசுக்கு தெரிந்திருந்த போதும், அதை ஏன் சட்டப் பேரவையில் தெரிவிக்கவில்லை” என்று நீதிபதிகள் தமிழக அரசை நோக்கி கேள்வியெழுப்பினர். மேலும், மசோதா 2017 ஆம் ஆண்டு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றியிருக்கலாமே? என்று நீதிபதிகள் தமிழக அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளனர். மத்திய அரசின் அந்த கடிதம் பற்றி தனக்கு தெரியவில்லை என தமிழக அமைச்சரோ, செயலாளரோ கூற முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட பின், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.