Tamilnadu

உலகின் மூத்த மொழி சமஸ்கிருதமா ? : +2 பாடத்திட்டத்தில் பா.ஜ.க அரசின் அடுத்த சூழ்ச்சி வேலை !

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில், தமிழை விட சமஸ்கிருதம் பழமைவாய்ந்த மொழி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் இந்தாண்டு பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பாடப் புத்தகங்களில் தேசிய கீதமே தவறாக அச்சிடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. பல வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களில் தகவல் பிழைகளும், எழுத்துப் பிழைகளும் அதிகளவில் காணப்படுவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தின் 142வது பக்கத்தில் உள்ள பாடம் 5ல், 'The Status of Tamil as a Classical Language' எனும் பாடத்தில், சமஸ்கிருதம் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழி என்றும், தமிழ் மொழி கி.மு. 300 ஆண்டுக்கு முற்பட்ட மொழி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மொழியே உலகின் பழைமையான மொழி என்பது மொழியியல் ஆய்வறிஞர்கள் ஒப்புக்கொண்ட கூற்று. மிகப் பழமையான பல மொழிகள் அழிந்துவிட்டாலும், பெருமை மங்காமல் நிலைத்து நிற்கிறது நம் தமிழ் மொழி. சமஸ்கிருதத்தை திணிக்க நினைக்கும் மோடி கூட, தமிழகத்தில் பேசும்போது, “உலகிலேயே பழமையான மொழி தமிழ் மொழி என்பதில் இந்திய தேசம் பெருமை கொள்கிறது” என்றார்.

அத்தகு பெருமை வாய்ந்த தமிழைத் தாழ்த்தி, சமஸ்கிருதத்தை பெருமைப்படுத்தும் விதமாக தவறான தகவலை பாடப் புத்தகங்களில் அச்சிட்டது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, பாரதியார் காவி நிறத்தில் தலைப்பாகை அணிந்தது போல புத்தக அட்டையில் படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.