Tamilnadu

கடைசி நேர நெரிசலுக்கு இனி ‘குட்பை’? : சென்னை விமான நிலையத்தில் புதிய நடைமுறை!

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் வரும் வாகனங்கள் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கிளம்பவேண்டும் இல்லையெனில் கூடுதல் கட்டணம் என்ற நடைமுறை இன்று (ஜூலை 15) முதல் தளர்த்தப்படுவதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் வரும் மற்றும் திரும்பச்செல்லும் வாகனங்கள், நிறுத்தப்பகுதிகளில் 10 நிமிடங்களுக்கு அதிகமாக நின்றால், ரூ.120 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருந்தது. இனி இந்த நடைமுறை தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் RFID வழங்கப்படும். இதன் மூலம் வாகனங்கள், விமான நிலைய வளாகத்தில் எவ்வளவு நேரம் இருக்கின்றன என்பதை கண்காணிக்க முடியும். 10 நிமிடத்திற்குள் பயணிகளை இறக்கிவிட்டு கிளம்பவேண்டும் என்ற அவசரத்தில் டெர்மினல் முன் உள்ள பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பயணிகள் வரும் வாகனங்கள், பயணிகளை இறக்கிவிட்டபின் அங்கிருந்து புறப்பட்டு சென்றால் போதும். புறப்பட வேண்டிய நேரத்திற்கு காலக்கெடு இல்லை. ஆனால், நோ பார்க்கிங் பகுதியில் ஆட்களை இறக்கி விடும் வாகனங்களுக்கு 30 நிமிட நிறுத்த கட்டணத்திலிருந்து 4 மடங்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, “புதிய நடைமுறையின் மூலம் பயணிகள் பயனடைவார்கள்; போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட கடைசி நேர இடையூறுகளிலிருந்து விடுதலை கிடைக்கும்” என இந்திய விமான பயணிகள் சங்க தேசிய தலைவர் சுதாகர ரெட்டி தெரிவித்துள்ளார்.