Tamilnadu

8 வழிச்சாலை: தீர்ப்பு வந்து 10 வாரங்களாகியும் நிலத்தை ஒப்படைக்காமல் இழுத்தடிக்கும் அரசு

சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது. இந்த பணிக்காக தமிழக அரசு, எந்த வித அனுமதியும் இன்றி விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தியது. விவசாயிகளின் எதிர்ப்பை மீறி எல்லைக் கல் நடப்பட்டது.

இந்த திட்டத்தால் சேலத்தில் உள்ள 6 கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவே திட்டத்தைக் கைவிடவேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். நீதிமன்றத்திலும் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு முடிவில் 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் 8 வழிச் சாலை திட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தி, அரசின் பெயரில் மாறுதல் செய்யப்பட்ட நிலங்களை, அந்தந்த விவசாயிகள் பெயரிலேயே மாற்ற உத்தரவு பிறப்பித்து 2 வாரகாலத்திற்குள் தெரிவிக்க வேண்டும், 8 வார காலத்திற்குள் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் தற்போது 10 வாரங்கள் முடிவடைந்த நிலையில் ஆவணங்களில் முறையான மாற்றங்கள் செய்யப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. அதே நேரம் மத்திய நெடுஞ்சாலைத் துறை சார்பாக நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடும் செய்யப்பட்ட்து. மேலும் நீதிமன்றம் அளித்த உத்தரவை, எடப்படி அரசு மீறி செயல்படுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என கருத்து எழுந்துள்ளது.

அரசின் அலட்சியத்தை பார்த்து மனம் கொள்ளாத விவசாயிகளும், அப்பகுதி பொது மக்களும் சேர்ந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்து, வருவாய்த்துறை ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்து திரும்ப ஒப்படைக்கக் கோரி மனு அளிக்கும் போராட்டம் நடைபெறும் என்று 8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு சார்பில் அறிவித்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதையும் மீறி சேலம் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர்.இந்த பேரணியில், விவசாயிகள், விவசாய அமைப்புகள் பொதுமக்கள் என பலர் கலந்துக் கொண்டனர். ஆனால், ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் மனு கொடுக்க முடியாமல் போனது. ஆனால், நிலங்கள் தங்கள் பெயரில் மாற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.