Tamilnadu

“தோன்றிய இடம்தோறும் புகழ்க்கொடி நாட்டியவர் கலைஞர்”: திருநாவுக்கரசர் புகழாரம்!

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் 96-வது பிறந்தநாள் தமிழகத்தில் பல இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினா மற்றும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைவர் கலைஞர் சிலை அருகே அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் பலரும் மரியாதை செலுத்தினர்.

அண்ணா அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “அரசியல் ஞானியாக, அரசிய மேதையாகத் திகழ்ந்தவர் கலைஞர். தோன்றிய இடம்தோறும் புகழ்க்கொடி நாட்டியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்” என்றார்.

மேலும், தமிழ்த்தாயின் தவப்புதல்வன், இயல் இசை நாடகங்களில் விற்பன்னராகத் திகழ்ந்தவர். சிலருக்குக் கவிதை வரும், சிலருக்கு வசனம் வரும் ஆனால் கலைஞருக்கு எல்லாம் வரும். தோன்றிய இடங்களில் எல்லாம் முதல்வராக, மக்களின் மனங்களில் முதல்வராக இருப்பவர் கலைஞர் அவர்கள் என்றும் அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்றார்.

37 எம்.பி-கள் நாடாளுமன்றம் சென்றும் பயனில்லை என தமிழிசை பேசியது குறித்து பேசியவர், தமிழிசை வாயில் இருந்து நல்ல இசை வரட்டும் என்றார். மோடி எதிர்காலத்தில் எப்படி செயல்படப்போகிறார் என்பதற்கான பிள்ளையார் சுழி தான் மும்மொழிக் கொள்கை என்றவர், மக்கள் விரோதப் போக்கில் தான் அவர் செயல்படப் போகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.