Tamilnadu

பள்ளிக் கல்வித்துறையின் தவறுக்கு நாங்கள் பலியாவதா? ஆசிரியர்கள் குமுறல்

ஆசிரியர் தகுதித் தேர்வான ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 1500 பேர் பணி இழக்கும் அபாயம் ஏற்படுவதற்கு முழு காரணம் தமிழக அரசு தான் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவ்வமைப்பின் தலைவர் மாயவன், ”தமிழக அரசின் உதவி பெறும் உயர்நிலை மேல் நிலைப்பள்ளிகளின் 1500 ஆசிரியர்களை வீட்டிற்கு அனுப்பும் வேலையில் தமிழக அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது. வருடத்திற்கு 2 தேர்வுகள் நடத்த வேண்டும் என்ற போதும், காலதாமதமாக தேர்வு நடத்தியதோடு, 2013-க்கு பிறகு 4 வருடங்களும், 2017 ல் இருந்து இதுவரையும் டெட் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை.

16 தேர்வுகள் நடத்த வேண்டிய இடத்தில் இதுவரை 4 தேர்வுகளையே தமிழக அரசு நடத்தியுள்ளது. தவறுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை செய்துவிட்டு ஆசிரியர்களை மீது நடவடிக்கை எடுக்கின்றனர். அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் டெட் கட்டாயம் என்பது ஏற்புடையதல்ல. தகுதி நீக்கம் என்பது ஆசிரியர்களை தற்கொலைக்குத் தூண்டும் விதமாக உள்ளது” என்றார் அவர்.

மேலும் “ 23.8.2010-ல் இருந்து 16.11.2012 வரையிலான காலகட்டத்திற்க்குள் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றார். அரசின் செயல்பாட்டை பொறுத்து அடுத்தக் கட்டமாக 7 ம் தேதி ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.