Tamilnadu

“அழகா இருந்தா 4 லட்சம்” : 3 குழந்தைகளை விற்றதாக செவிலியர் அமுதா வாக்குமூலம்!

நல்ல அழகான ஆண் குழந்தைகளை சுமார் 4 லட்ச ரூபாய்க்கும், பெண் குழந்தைகளை சுமார் 3 லட்ச ரூபாய்க்கும் விற்பதாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா பேசிய ஆடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை இல்லாத ஒருவரிடம் ஓய்வு பெற்ற செவிலியர் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அந்த செவிலியர், “நான் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி, கொடுத்து வருகிறேன். இதனால் தான் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். முன்பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்தால் தான் குழந்தையை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

குழந்தை வந்ததும் நேரில் வந்து பார்த்து எடுத்துச் செல்லலாம். குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்றாலும் ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கிக் கொடுக்கிறேன்” என அவர் கூறுகிறார். பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்கள் மூலம் குழந்தைகள் இருப்பதை அறிந்து, குழந்தை இல்லாத தம்பதிகளுக்குப் பணம் வாங்கிக்கொண்டு விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ராசிபுரம் மகளிர் காவல் துறையினர் ஓய்வுபெற்ற செவிலியரிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முதற்கட்டமாக 3 குழந்தைகளை விற்றதாக அமுதா தெரிவித்துள்ளார். விற்பனை செய்த குழந்தைகளில் 2 குழந்தைகள் கொல்லிமலையைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒரு குழந்தை சேலத்தை சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பிறப்புச் சான்றிதழ் எப்படி பெற்றார் என்பது குறித்தும் விசாணை நடைபெற்றுவருகிறது.

விசாரணையில் தற்போது அவரது கணவர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டிருக்கிறார். முடிவில் அவர்கள் இன்னும் எவ்வளவு குழந்தைகளை இதுபோன்று விற்பனை செய்துள்ளனர் என்பது தெரியவரும்.