Tamilnadu

நாளையுடன் ஓய்வடைகிறது தேர்தல் பிரச்சாரம் 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிக்கான தேர்தலும், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக வருகிற 18ம் தேதி நடக்கிறது.

இதில், 39 மக்களவை தொகுதியில் மட்டும் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதேபோன்று 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் பலரும் உற்சாகமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால், தி.மு.க தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.

தமிழகத்தில் வருகிற 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு பிரசாரம் முடிவடையும். அதன்படி, தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறார்.

தேர்தல் பிரசாரம் நிறைவடைய இன்னும் ஒரு நாளே உள்ளதால் தமிழகத்தில் தற்போது கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் உடனடியாக பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடைசி 2 நாட்களில்தான் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படும் என்பதால், இதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் வியூகம் வகுத்துள்ளது. அதன்படி வங்கிகள் மூலம் பணப்பரிமாற்றம் நடைபெறுகிறதா என்பதை வருமான வரித்துறையினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.