Sports

உலகக்கோப்பையில் கால் வைத்த மிட்செல் மார்ஷ் : உ.பி காவல்துறையில் FIR பதிவு - பிரதமர் மோடிக்கும் கோரிக்கை !

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் ட்ராவிஸ் ஹெட், லபுசேனேவின் ஆட்டம் காரணமாக இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியில் வென்ற பிறகு வழங்கப்பட்ட உலகக்கோப்பையை வைத்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஏராளமான புகைப்படங்கள் எடுத்தனர். அதில், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் உலகக்கோப்பையின் மேல் தனது கால்களை நீட்டியபடி இருந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏராளமானோர் அதனை விமர்சித்திருந்த நிலையில், பலர் மிட்செல் மார்ஷ்க்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், உலகக்கோப்பையின் மேல் தனது கால்களை நீட்டிய மிட்செல் மார்ஷ் மீது உத்தரபிரதேச காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பண்டித் கேசவ் என்பவர் உலகக்கோப்பையில் கால் வைத்து இந்திய ரசிகர்களின் உணர்வுகளை அவமதித்ததாக உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, இந்த புகாரின் நகலை பிரதமர் மோடிக்கு அனுப்பிவைத்த பண்டித் கேசவ், மிட்செல் மார்ஷ்க்கு இந்தியாவில் கிரிக்கெட் ஆட தடைவிதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: 60 நொடிக்குள் பந்து வீசாவிட்டால் பெனால்டி: ICC-யின் புதிய விதிமுறையால் பாதிக்கப்படும் பந்துவீச்சாளர்கள்!