Sports

சேப்பாக்கத்தில் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்த CSK.. 200 ரன்களை கடந்து சாதனையையும் தக்கவைத்தது !

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இந்த நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது போட்டியில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்ய சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ருத்துராஜ் மற்றும் கான்வே ஆகியோர் ஆரம்பத்தில் இருந்தே லக்னோ அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இதனால் பவர் பிளே முடிவில் சென்னை அணி 79 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து அதிரடியாக ஆடி 100 ரன்கள் ஜோடி சேர்ந்து அடித்த பின்னர் ருத்துராஜ் 57, கான்வே 47 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த வீரர்களும் அதிரடியாக ஆட சென்னை அணி 200 ரன்களை கடந்தது. இறுதியில் தோனி பிரமாண்டமான இரண்டு சிக்ஸர் விலாச 20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய லக்னோ அணியும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. பவர் பிளே ஓவர் முடிவில் சென்னை அணியை விட அதிக ரன்கள் குவித்தது. ஆனால் மொயின் அலி பந்துவீச்சில் மேயர்ஸ் 53 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்களில் 207 ரன்கள் மட்டுமே குவிக்கப்பட சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் 200 ரன்கள் குவித்த சென்னை அணி ஐபிஎல் தொடரில் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணி என்ற பெருமையை தொடர்ந்து தக்கவைத்துள்ளது. சென்னை அணி இதுவரை 24 முறை 200 ரன்னுக்கு மேல் குவித்துள்ளது. இந்த பட்டியலில் 22 முறை 200 ரன்னுக்கு மேல் குவித்து பெங்களூரு அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

Also Read: "உலகக்கோப்பையை சச்சினுக்காக வெல்ல நினைத்தோம்" - 2011 உலகக்கோப்பை குறித்து மனம் திறந்த MS தோனி !