Sports

டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய தமிழ்நாடு.. ரஞ்சி கோப்பையில் சதம் விளாசிய முன்னாள் CSK வீரர் !

உள்நாட்டில் நடக்கும் புகழ்பெற்ற ரஞ்சி தொடர் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. எப்போதுமே 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து அசத்தும் தமிழ்நாடு அணி ரஞ்சி தொடரில் தொடர்ந்து மோசமான செயல்பாட்டையே தந்து வருகிறது.

இந்த நிலையில், ரஞ்சி தொடரில் தமிழக அணி ஹைதராபாத் அணியை சந்தித்தது. இதில் முதலில் ஆடிய ஹைதராபாத் அணி தன்மே அகர்வால் மற்றும் மிக்கில் ஜெய்ஷ்வால் ஆகியோரின் சதம் காரணமாக 395 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தமிழக அணி சார்பில் சந்தீப் வாரியர் 5 விக்கெட்டுகளையும், விக்னேஷ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

அதனைத் தொடர்ந்து தமிழக அணி பேட்டிங் ஆடியது. இதில் தொடக்க வீரராக நாராயணன் ஜெகதீசன், களமிறங்கினார். இவர் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்கள் விளாசியதோடு, ஒரு போட்டியில் 277 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருந்தார்.

இதனால் இவர்மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக இவரும், மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்சனும் அதிரடி ஆட்டம் ஆடினர், ஹைதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து இந்த ஜோடி மளமளவென ரன்களை குவித்தது.

4 நாள் நடைபெறும் இந்த போட்டியின் இரண்டாம் நாள் முடிவடைந்த நிலையில், தமிழக அணி 35 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 203 ரன்கள் குவித்துள்ளது. ஜெகதீசன் 95 பந்துகளில் 116 ரன்களும், சாய் சுதர்சன் 115 பந்துகளில் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அதிலும் ஜெகதீசன் 16 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசி அதன்மூலம்,84 ரன்கள் குவித்துள்ளார். இவரின் இந்த அதிரடி காரணமாக இந்த முறை நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் இவர் பல கோடிகளுக்கு ஏலம் போவார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

Also Read: இன்னும் ஒரு போட்டிதான்.. ஓய்வை அறிவித்த மெஸ்ஸி.. முடிவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவானின் சர்வதேச பயணம் !