Sports

உலககோப்பையில் பும்ரா இடம் பெறுவாரா ? முக்கிய தகவலை வெளியிட்ட BCCI தலைவர் கங்குலி !

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் வெற்றி பெறும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணியின் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

மேலும் இந்த டி20 உலகக் கோப்பை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்திய அணி வீரர்களின் ஆட்டங்கள் தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியே வருகிறது.

அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கான தொடரில் இந்திய அணி 2-1 என கைப்பற்றினாலும், முதல் போட்டியில் 200 ரன்களை அடித்தும் ஆஸ்திரேலியா அணி எளிதில் வெற்றி பெற்றது இந்திய அணியின் பந்து வீச்சைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இருப்பினும் இந்த போட்டியில் பும்ரா விளையாடவில்லை.

பயிற்சியின் போது பும்ராவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் 6 மாதங்கள் வரை விளையாட முடியாது என்ற தகவலும் வெளியாக உள்ளது.அடுத்த மாதம் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாகல் அவர் அணியில் இடம் பெறுவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பும்ரா உலககோப்பையில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக BCCI தலைவர் கங்குலி கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "பும்ரா இன்னும் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகவில்லை. அவர் தொடரில் பங்கேற்பது குறித்து முடிவு அடுத்த 2 அல்லது 3 நாட்களில் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

வரும் 6-ம் தேதி வியாழன் அன்று இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்படவுள்ளது. அங்கு இந்திய அணி தொடருக்கான பயிற்சிகளை மேற்கொண்டு பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடவுள்ளது. அக்டோபர் 16-ம் தேதி உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது.

Also Read: அதிவேகமாக வாகனம் ஓட்டிய வழக்கு..பெங்களூருக்கு தப்ப முயன்ற TTF வாசனை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிஸ் !