Sports

‘என்னங்க இப்படி பண்ணி இருக்கீங்க’:Chess Olympiad ஏற்பாடுகள் குறித்து Spain Grand Master ட்விட்டர் பதிவு !

உலக செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), ஏஐசிஎஃப், தமிழ்நாடு அரசு இணைந்து முதன்முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகின்றன.

சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் 187 நாடுகளைச் சோந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா்.

இந்த தொடருக்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள் போன்றவை செஸ் விளம்பரத்தால் ஜொலிக்கிறது.

மேலும் காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலம் செஸ் கட்டங்களை போல வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இது தற்போது சுற்றுலா இடமாகவும் மாறியுள்ளது.

செஸ் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் சென்னைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

அதன்படி ஸ்பெயின் அணி இன்று காலை சென்னை வந்தடைந்தது. அதில் இடம்பெற்றுள்ள கிராண்ட் மாஸ்டர் ஃப்ரான்சிஸ்கோ வல்லேஜோ போன்ஸ் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார்.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "செஸ் ஒலிம்பியாட்டிற்காக இன்று காலை 5 மணிக்கு சென்னைக்கு வந்தேன். இதுவரை 9 செஸ் ஒலிம்பியாட்களில் பங்கேற்றுள்ளேன். ஆனால் இதுபோன்ற ஒரு சிறந்த விளையாட்டு அரங்கத்தை உலகில் நான் எங்குமே பார்த்ததில்லை. எங்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்துமே அற்புதமாக உள்ளன.

குறிப்பாக எங்களுக்கான ஹோட்டல்கள் அரங்கத்தில் இருந்து மிக அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் அழகான வரவேற்புகள். இது போன்ற ஒரு சூழலை நான் எங்குமே பார்த்ததில்லை. குறைக்கூற எதுவுமே இல்லை" எனக் கூறியுள்ளார். இவரின் இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Also Read: பாம்பு கடித்து இறந்த சிறுமி வழக்கில் திடீர் திருப்பம் : வெளியான பகீர் வீடியோ - முதியவர் போக்சோவில் கைது !