Sports

21 ஆண்டுகால ஏக்கத்தை தணிப்பார்களா இந்திய நட்சத்திரங்கள்..? - நாளை தொடங்கும் All England Open 2022

ஆல் இங்கிலாந்து ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நாளை தொடங்குகிறது. 21 ஆண்டு கால ஏக்கத்தை தீர்க்கும் நோக்கில் இந்திய வீரர்கள் விளையாடவுள்ளனர்.

மிகவும் பழமைவாய்ந்த தொடரான ஆல் இங்கிலாந்து ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நாளை தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென், ப்ரனாய், காஷ்யப், சாய் ப்ரணீத், சமீர் வெர்மா உள்ளிட்ட வீரர்களும், மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து, சாய்னா நேவால் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

அண்மையில் ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய லக்‌ஷயா சென் மீதான எதிர்பார்ப்பு இந்த தொடரில் அதிகரித்துள்ளது. அதேபோல், ஏற்கனவே ஆல் இங்கிலாந்து தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய சாய்னா, அரையிறுதி வரை முன்னேறிய சிந்து மீதான எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

முதல் சுற்றில் சிந்து, சீன வீராங்கனை வாங் ஸீ யி உடன் விளையாடுகிறார். சிந்து அடுத்தடுத்து வெற்றியைப் பதிவு செய்யும் பட்சத்தில் காலிறுதியில் ஜப்பானின் அகானே யமாகுச்சியை சந்திக்கும்படி அட்டவணை உள்ளது.

ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரை பொறுத்தவரை, 1980ல் பிரகாஷ் படுகோனே, 2001ல் கோபிசந்த் ஆகிய இரண்டு இந்திய வீரர்கள் மட்டும் மதிப்புமிக்க இந்த தொடரில் வாகை சூடியுள்ளனர். அதன்பிறகு, 21 ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு இந்திய வீரரும் இந்தத் தொடரில் பட்டம் வென்றதில்லை. இந்த முறை அந்த ஏக்கத்தை தணிக்கும் நோக்கில் இந்திய வீரர்கள் களம் காணவுள்ளனர்.

Also Read: ‘WTC’ கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்.. புதிய மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனை படைத்த அஸ்வின் !