Politics

“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!

திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அரசியல் பேரியக்கத்தின் கருத்தியல் தூணாய் விளங்கும் முரசொலி நாளிதழ், இன்றோடு (ஆக.10) தனது 85 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

முத்தமிழறிஞர் கலைஞரால் ஆக.10, 1942 அன்று நிறுவப்பட்ட இந்நாளிதழ், இன்றளவும் லட்சக்கணக்கான வாசகர்களை பெற்றுள்ளது.

தி.மு.கழகத்தினருக்கு அளிக்கப்படும் முதன்மை அறிவுறுத்தலே, நாள்தோறும் முரசொலி படிக்க வேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட முரசொலியை, தன் மூத்த குழந்தையாய் கருதி, எழுத்துக்களால் செதுக்கினார் கலைஞர்.

தற்போது, அவ்வழியிலிருந்து சற்றும் விலகாமல் முரசொலிக்கு முக்கியத்துவமளித்து செயல்பட்டு வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், முரசொலியின் 85ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, முரசொலி அலுவலகம் சென்று பார்வையிட்ட பிறகு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு,

“கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பு - முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி!

அதன் அலுவலகத்திற்குச் சென்று, என் மூத்த சகோதரனுக்கு 85-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்!

தலைவர் கலைஞர், முரசொலி மாறன், முரசொலி செல்வம் என முரசொலியைத் தொடர்ந்து செழுமையாக வளர்த்தார்கள். நானும் முரசொலிக்காகப் பார்க்காத வேலையே இல்லை என்னும் அளவுக்கு, அனைத்து நிலைகளிலும் பணியாற்றி இருக்கிறேன்.

அறிவிப்புப் பலகைகளாக மட்டுமே இயங்கும் பல அரசியல் கட்சி இதழ்களுக்கு இடையே, கருத்தாழமிக்க கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பொங்கல் மலர், பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க!”

Also Read: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!