Politics

”மோடி அரசாங்கத்தின் நரம்புகளில் மோசடியும் போலித்தனமும் பாய்கிறது” : மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு!

வங்கி மோசடிகள், கடந்த நிதியாண்டில் ரூ.36,014 கோடியாக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 1.18 லட்சம் எண்ணிக்கையிலான ரூ. 500 கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 37.3% கூடுதல். இதன் மதிப்பு ரூ.5.88 கோடி எனவும் ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றிய மோடி ஆட்சியில் வங்கி மோசடிகள் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், மோடி அரசாங்கத்தின் 11 ஆண்டுகளில், ரூ.6,36,992 கோடி மதிப்புள்ள வங்கி மோசடிகள் நடந்துள்ளன. இது 416% அதிகரித்துள்ளது.

பணமதிப்பிழப்புக்குப் பிறகும், கடந்த ஆறு ஆண்டுகளில் போலி ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை 291% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அது மிக அதிகம்.மோடி ஜி, உங்கள் அரசாங்கத்தின் நரம்புகளில் மோசடி மற்றும் போலித்தனம் இருப்பது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிவில்,”2016 நவம்பர் 8 அன்று இரவு பிரதமரால் பிரமாண்டமாக அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதாரத்திற்கு மோடி ஏற்படுத்திய முதல் பெரிய அதிர்ச்சி. அதிலிருந்து நாடு இன்னும் முழுமையாக மீளவே இல்லை. ரூ.2,000 நோட்டுகள் 2016 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால் அவை அறிமுகப்படுத்தப்பட்டதைப் போலவே, அவற்றை புழக்கத்தில் இருந்து நீக்குவதற்கான அறிவிப்பு 2023 செப்டம்பர் 30 அன்று திடீரென வெளியிடப்பட்டது. தற்போது இந்த நோட்டுகளில் 98.24 சதவீதம் ரிசர்வ் வங்கிக்குத் திரும்பியுள்ளன. எவ்வளவு வீணான செயல். ஆனால் 2024-25 ல் போலி 500 ரூபாய் நோட்டுகள் 37% அதிகரித்தன. ரூபாய் நோட்டு தடையால் கள்ளநோட்டு ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது நினைவிருக்கிறதா?” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!