Politics
பொருளாதாரத்தில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு : The Hindu ஆங்கில இதழ் செய்தியின் முழு விவரம் !
2024-25ஆம் ஆண்டி 9.69% வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளது என ஒன்றிய அரசு புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலை வைத்து தி இந்து ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் !
9.69% வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் புதிய உச்சம் தொட்டது தமிழ்நாடு !
2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69% உண்மை வளர்ச்சி வீதத்துடன் (Real Economic Growth Rate) இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இதுவேயாகும்.
நிலையான விலைமதிப்பின்படி (அடிப்படை ஆண்டு: 2011-12), 2023-24ஆம் ஆண்டில் ரூ.15,71,368 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP), 2024-25ஆம் ஆண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளதாக ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன் 2017-18ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி வீதம் 8.59% பதிவாகியுள்ளது. 2020-21ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் குறைந்தபட்சமாக 0.07% எனப் பதிவாகியது. இக்காலகட்டத்தில் பல மாநிலங்கள் எதிர்மறை வளர்ச்சியினைக் (Negative Growth) கொண்டிருந்த நிலையில், தமிழ்நாடு குறைந்தபட்சம் நேர்மறை வளர்ச்சியினைக் (Positive Growth) கொண்டிருந்தது.
உண்மை வளர்ச்சி வீதம் (Real Growth Rate) என்றால் என்ன?
பணவீக்கத்தைக் (Inflation) கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே உண்மை வளர்ச்சி வீதம் ஆகும். பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே பெயரளவு வளர்ச்சி வீதம் (Nominal Growth Rate) ஆகும். 2024-25 ஆம் ஆண்டு தமிழ்நாடு 14.02 சதவீதம் பெயரளவு வளர்ச்சி வீதத்தினைப் பெற்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் திகழ்கிறது.
ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையதளத்தில் குஜராத், பீஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 2024-25 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி வீதத் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
தமிழ்நாடு அரசு முதன்முதலாக மார்ச் 2025 இரண்டாம் வாரத்தில் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் முன்கணிப்பு செய்யப்பட்ட வளர்ச்சி வீதத்துடன், ஒன்றிய அமைச்சகம் வெளியிட்ட உண்மை வளர்ச்சி வீதம் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்தப் பொருளாதார ஆய்வு 8% க்கும் மேல் வளர்ச்சி இருக்கும் எனக் கணித்திருந்தது. சென்னைப் பொருளியியல் நிறுவனத்தின் (Madras School of Economics) மூத்த பொருளாதார வல்லுநர்களான முனைவர் சி. ரங்கராஜன் மற்றும் முனைவர் கே.ஆர். சண்முகம் ஆகியோர் ஜூலை 2024ல் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி வீதம் 9.3% ஆக இருக்கும் எனக் கணித்திருந்தனர். இறுதியில், மேற்குறிப்பிட்ட இரண்டு மதிப்பீடுகளையும் தாண்டி அதிக வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது.
வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தவை:
சேவைகள் துறையில் (மூன்றாம் நிலை) அடைந்த 12.7% வளர்ச்சியும் இரண்டாம் நிலைத் துறையில் அடைந்த 9% வளர்ச்சியுமே மாநிலம் அதிக வளர்ச்சியை எட்டியதற்கு முக்கியமான காரணிகளாகும். முதன்மைத் துறையின் செயல்பாடு வெறும் 0.15% மட்டுமேயாகும். மாநிலத்தின் மொத்த மதிப்புக் கூட்டலில் மூன்றாம் நிலைத் துறையின் பங்களிப்பு 53% ஆகும். இரண்டாம் நிலைத் துறை, முதன்மைத் துறையின் பங்களிப்பு முறையே 37%, 10% ஆகும்.
மூன்றாம் நிலைத் துறையினைப் பொருத்தவரையில் மனை வணிகம் 13.6%, தகவல் தொடர்பு, ஒலிபரப்பு 13%, வர்த்தகம் பழுது நீக்கல், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் 11.7% எனப் பங்களித்திருக்கின்றன. இரண்டாம் நிலைத் துறையினைப் பொருத்தவரையில் உற்பத்தி, கட்டுமானம் முறையே 8%, 10.6% வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன.
பயிர்த் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவை முதன்மைத் துறையின் முக்கியமான பிரிவுகளாகும். இவ்விரண்டு பிரிவுகளும் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியினைப் பெற்றிருக்கவில்லை. பயிர்த் தொழில் -5.93% வளர்ச்சியினையும் கால்நடை வளர்ப்பு 3.84 சதவீதம் பதிவு செய்துள்ளன.
சென்னைப் பொருளியில் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான முனைவர். கே.ஆர். சண்முகம் அவர்கள், 2021-22 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சியினைத் தமிழ்நாடு எய்தி வருவதாகத் தெரிவிக்கிறார். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த 9.7% என்ற வளர்ச்சி வீதத்தினைத் தக்கவைத்துக் கொண்டால், 2032-33 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடையும்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!