Politics

"75 ஆண்டுகளில் இந்த அளவுக்கா நாடு தடுமாறிக் கொண்டிருக்கிறது" - குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் !

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் இம்ரான் பிரதாப்காதி சமூக ஊடகத்தில் வெளியிட்ட கவிதையை குறிப்பிட்டு அவர் மீது 6 பிரிவுகளில் குஜராத் அரசு வழக்கு பதிவு செய்தது. அதில் மத உணர்வுகளுக்கு எதிரானது, தேச ஒன்றுமைக்கு எதிரானது என்று வழக்கில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி இம்ரான் பிரதாப்காதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபை ஓகா, உச்சால் பூயான் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் குஜராத் அரசு மீது உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இது குறித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், "கவிதையில் மத வெறுப்பு எதுவும் இல்லை. மாறாக அன்பு, அகிம்சை கருத்துக்கள்தான் உள்ளன. அநீதியை அன்பு மூலம் வெல்லும் கருத்துக்கள்தான் உள்ளன. நாடு குடியரசாகி 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு கவிதை, நகைச்சுவை நிகழ்ச்சி வெறுப்புக்கு வழிவகுக்கும் என்று கூறும் அளவுக்கு நாடு தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இது போன்ற வழக்குகள் சுதந்திரமான ஒரு சமூகத்தின் கருத்துக்களை நசுக்குவதாக அமையும். ஒரு தகவலை சித்தரிக்கும் உரிமை எழுத்தாளருக்கு, கவிஞருக்கு உண்டு. அரசியலமைப்பு வழங்கி உள்ள கருத்து சுதந்திரத்துக்கு எதிராக யாரும் செயல்பட முடியாது" என்று கூறப்பட்டுள்ளது. அதோடு இம்ரான் பிரதாப்காதி மீதான வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Also Read: ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த விவகாரம் : நடிகர் குணால் கம்ராவுக்கு ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !