Politics

“ஒன்றிய அமைச்சருக்கு தமிழ்நாட்டின் வரலாறே தெரியாது...” - இந்தி திணிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்!

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு எதிரான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது. பாஜகவின் இந்த செயல்களுக்கு எதிராக குரல் எழுப்பும் மாநிலங்களை தொடர்ந்து குறிவைத்து நிதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது. அதிலும் தமிழ்நாட்டிடம் பாஜக நிதியை கொடுக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தர மறுத்து வருவதற்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், அண்மையில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி நிதியை பாஜக ஆளும் மற்றும் அதன் கூட்டணி மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது.

இதற்கு தமிழ்நாடு மக்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மத்தியில் கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், மும்மொழி கொள்கை, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியும் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த பிப்.15 பேட்டியளித்துள்ளது கண்டனங்களை எழுப்பியுள்ளது.

ஒன்றிய அமைச்சரின் இந்த பேச்சு தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :

மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம். அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரியாது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது, அரசியல் சாசனம் உருவாகிய வரலாறும் தெரியாது என்பவற்றை அவருடயை ஆணவப் பேச்சு காட்டுகிறது.

மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில அரசின் உண்மை. இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது என்பது அவருக்குத் தெரியுமா? இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஜவஹர்லால் நேரு அவர்களும் இந்திரா காந்தி அவர்களும் தந்த உறுதிமொழிகளையாவது அவருக்குத் தெரியுமா?

நாடாளுமன்றம் அனுமதித்த நிதியை இந்தி மொழியைக் கற்பிக்காத மாநிலத்திற்கு தரமாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவருக்குத் தெரியுமா? தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும்.

Also Read: பிரிவினையின் மூலமே 'சமஸ்கிருதம்', அது இந்தியாவின் மூலம் அல்ல - பாஜகவினருக்கு பாடம் எடுத்த முரசொலி !