Politics

Union Budget 2025-26 : ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு !

ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று நாட்டின் முக்கியத்துறைகளுக்கு ஒவ்வொரு மாநிலங்களுக்கு என்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் அறிவிக்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டு 2025-2026 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜன.3) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதையொட்டி, பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார்.

இதைத்தொடர்ந்து இன்று (பிப்.01) தனது 8-வது ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதற்கு முன்னதாக, நிதியமைச்சக நுழைவு வாயிலில் பட்ஜெட் தயாரிப்பு குழுவினருடன் பட்ஜெட் ஆவணங்களை கையில் ஏந்தியபடி நிர்மலா சீதாராமன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மேலும் நிதி அமைச்சக அதிகாரிகளும் ஒன்றிய நிதியமைச்சருடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று, குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் விவரங்கள் தெரிவித்து அவரிடம் வாழ்த்து பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

தனது பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் தொடங்கிய நிலையில், கும்பமேளா விபத்து உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். எனினும் தனது உரையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்தார்.

இதையடுத்து தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவையை விட்டு ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். இதனால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது.

Also Read: தமிழ்நாட்டின் காலனி உற்பத்தி துறைக்கு பொருளாதார ஆய்வறிக்கை அங்கீகாரம்- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!