Politics

“அமைதி… அமைதியோ அமைதி! என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி கண்டனம்!

தமிழ்நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகளையும், நடக்காத நிகழ்வுகளையும் கனத்த குரலில் கண்டனமாக எடுத்துரைக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வின் தவறுகளில் கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வருகிறார்.

குறிப்பாக, நாடாளுமன்றத்தில் “எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள். அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு இதுவரை கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

இதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் ரகுபதி, தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் திமுகவும் பங்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி தமிழ்நாடு முழுக்க திராவிட முன்னேற்றக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாடாளுமன்ற வளாகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள்.

சட்டமேதை, சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார்.

ஒன்றிய பாஜக அரசு மக்களாட்சியை அழிக்க கொண்டுவரத் துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எதுவும் கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி, அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் “வலிக்காமல் வலியுறுத்த” கூட மனமில்லாமல் அமைதி… அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி.

யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்று” என தெரிவித்துள்ளார்.

Also Read: ரூ.177.84 கோடி செலவில் 34 பாலங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! - விவரம் உள்ளே!