Politics

"இடிக்கப்பட்டது பாபர் மசூதி இல்லை, இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கை" - CPI மாநில செயலாளர் முத்தரசன் !

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தி நகரில் உள்ள  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகமான  பாலன் இல்லத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்  அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மோடி தலைமையிலான ஆட்சியில் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயக முறை மிகச் சிறந்த முறை, அந்த முறையை சீர்குலைக்கக் கூடிய வகையில் மோடி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

மதச்சார்பின்மை என்ற மதத்தான கொள்கையை அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி தந்திருக்கிறது. மதச்சார்பின்மை,  சோசலிசம் என்ற சொற்களை நீக்கிவிட வேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ் மற்றும் அதன்  அரசியல் பிரிவான பாஜகவும், சங் பரிவார் அமைப்புகளும் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். 

மதசார்பின்மை என்று குறிப்பிடுகிற போது அம்பேத்கருடைய நினைவு நாளை போற்றுகிற இதே நேரத்தில் தான் பாபர் மசூதியும் இன்று இடிக்கப்பட்டது.  இடிக்கப்பட்டது பாபர் மசூதி இல்லை. இந்தியாவினுடைய மதச்சார்பின்மை என்ற கொள்கை இடிக்கப்பட்டிருக்கிறது.

அம்பேத்கர் நினைவுகளை போற்றி வணங்குகிற நேரத்தில்  அரசியலமைப்பு சட்டத்தையும் அது வழங்கியிருக்கக்கூடிய கோட்பாடுகளையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அனைவரும் சபதம் ஏற்க  வேண்டும்"என்று கூறினார்.

Also Read: "மத மோதலை உருவாக்கக்கூடிய சூழலை பாஜக உருவாக்கி வருகிறது " -CPIM ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி !