Politics

“தமிழ்நாடு தண்ணீரில் தத்தளிக்கும் போது திரைப்படம் பார்க்கிறார் பிரதமர் மோடி!” : மாணிக்கம் தாகூர் கண்டனம்!

மக்களவை தேர்தலுக்கு பின்னான நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் நாள் தொடங்கி நடந்துவருகிறது. இக்கூட்டத்தொடரில் பெருவாரியான நாட்கள் அதானி ஊழல் விவகாரத்தை மழுங்கடிப்பதற்காகவும், மணிப்பூர் கலவரத்தை புறக்கணிப்பதற்காகவுமே ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, அவ்வப்போது நாடாளுமன்ற விவகாரங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், “தமிழ்நாட்டின் 14 மாவட்டங்கள் ஃபெங்கால் புயல் சீற்றம் மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நாள் தமிழ்நாடு தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தபோது, பிரதமர் மோடி திரைப்படம் பார்த்து கொண்டிருந்தார் என்கிற செய்தி மிகவும் கவலையளிக்கிறது.

ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கான உடனடி நிவாரண நிதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2,000 கோடி கோரியுள்ளார். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து வரலாற்று தவறை செய்து கொண்டிருக்கிறது. 2016 வர்தா புயல், 2017 மற்றும் 2018 புயல்களுக்கான நிவாரணமாக தமிழ்நாடு கேட்ட ரூ.43,993 கோடிக்கு மாற்றாக, ரூ.1,723 கோடி ரூபாய் தான் தரப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த மாற்றான் தாய் மனப்பான்மை மாறவேண்டும்” என தெரிவித்தார்.

இந்நிலையில் தான், ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டின் மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்துறை, வேளாண்துறை, வருவாய்த் துறை, பேரிடர் மீட்பு ஆணையம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இதனால், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது, வீடுகள் சேதமடைந்துள்ளன, மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாடு அரசு களப்பணியாற்றி வருகிறது. ஆனால், இப்போது தான் ஒன்றிய அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது என கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

Also Read: ”தமிழ்நாட்டிற்கு ரூ.2000 கோடி நிதி உடனே தேவை” : மக்களவையில் கனிமொழி MP வலியுறுத்தல்!