Politics

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கான உரிமையை ஏன் மறுக்கிறீர்கள் - ஒன்றிய அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் கேள்வி !

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இறுதியாக கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. இந்த கூட்டணி கடந்த 2018-ம் ஆண்டு உடைந்தது.

மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதால் அங்கு ஆட்சி கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட சட்டப்பிரிவு 370 மற்றும் 1954ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரால் செயல்படுத்தப்பட்ட 35ஏ என்ற சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது.

மேலும், சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, பின்னர் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவரின் அனுமதியோடு அது நிறைவேறியது. அதோடு நிற்காமல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஒன்றிய அரசு அறிவித்தது.

அதன் பின்னர் அங்கு தற்போதுவரை சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்தது.அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு தங்கள் சொந்த அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை ஏன் மறுக்கிறீர்கள் என முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "இங்கு மக்களவைத் தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழல் இருக்கும்போது, சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கு மட்டும் எப்படி இல்லாமலிருக்கும்.இன்னும் எத்தனை காலம் துணை நிலை ஆளுநரே இங்கு ஆட்சி புரிவார்?

நான்கு மாநிலங்கள் இந்த மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கின்றன. ஆனால், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு தங்கள் சொந்த அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. மக்களின் இதயங்களை நீங்கள் வெல்ல விரும்பினால், இங்கு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும்"என்று கூறியுள்ளார்.

Also Read: பாஜகவை வீழ்த்துவதே இலக்கு, இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் - மும்பையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை !