Politics

உயர் கல்வி நிறுவனங்களில் பறிபோகும் இடஒதுக்கீடு : OBC, SC, ST பிரிவினருக்கான இடங்களை பறிக்கும் பாஜக அரசு !

குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே கல்வி,அரசு வேலைகளில் இடம்பெறுகிறார்கள் என்பதால் நாட்டில் இடஒதுக்கீடு முறை பல போராட்டங்களுக்கு பின்னர் அமல்படுத்தப்பட்டது. ஆனால் சிலர் சாதிய பாகுபாட்டை நீக்கி சமத்துவத்தை கொண்டு வரவே இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது என்பதை மறைத்து இடஒதுக்கீட்டால்தான் சாதி இருக்கிறது என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

அதே போல கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஒன்றிய அரசின் ஐஐடி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் பெரும்பாலும் உயர்சாதியினரே கல்வி கற்று வரும் நிலையில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது.

அதிலும், சமீப காலமாக அங்கு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களின் தற்கொலை என்பது தொடர் கதையாக வருகிறது. ஐஐடி கல்வி நிறுவனங்ளில் ஆசிரியர் பணியிடங்களில் பெரும்பாலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படாத நிலையில், அங்கு உயர்சாதி என சொல்லிக்கொள்ளும் சமூகத்தை சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்து வருகின்றனர். இதற்கு அங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படாததே காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசின் நிறுவனமான பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ளது. அதில், OBC, SC & ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ள இடங்களில் உள்ள காலியிடங்களை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Group A & B இடங்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் அனுமதியோடு பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கலாம் என்றும், Group C & D இடங்களுக்கு அந்தந்த பல்கலைக்கழக நிர்வாக குழுவே அந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒன்றிய அரசின் பணியிடங்களில் OBC, SC & ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், அதனை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கும் வகையில் பாஜக அரசு இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

Also Read: பீகார் : 3 ஆண்டுகளில் 3-வது முறை மாறிய கூட்டணி... முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார் !