Politics

மராட்டிய பால் பண்ணை நிறுவனத்தை குஜராத் நிறுவனத்துக்கு விற்கும் பாஜக கூட்டணி அரசு- எதிர்கட்சிகள் கண்டனம்!

தமிழ்நாட்டில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு இருப்பது போல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புகள் இருந்து வருகிறது. அதில் ஆவின் போல கர்நாடகாவின் நந்தினி பால் கூட்டுறவு சங்கமும் மிகப்பெரியதாகும்.

ஆனால், கர்நாடகாவின் நந்தினி பால் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து குஜராத்தில் அமுல் கூட்டுறவு சங்கம் இணைந்து செயல்படும் என கடந்த ஆண்டு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அங்குள அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

அதேபோல தமிழ்நாட்டிலும் குஜராத்தின் அமுல் நிறுவனம் நுழைய பார்த்தது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில் அதை குஜராத்தின் அமுல் நிறுவனம் மீறி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மும்பையில் மாநில அரசுக்கு சொந்தமான `மகானந்த் டைரி' என்ற பால் பண்ணை நிறுவனத்தை குஜராத்தின் நிறுவனத்துக்கு விற்பதாக பாஜக அரசு அறிவித்துள்ளது கண்டனத்தை பெற்றுள்ளது. மகானந்த் டைரி நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்பட்ட நிலையில், அதனை குஜராத்தை சேர்ந்த தேசிய டைரி டெவலப்மெண்ட் போர்டு என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்க மாநில பாஜக கூட்டணி அரசு முயற்சித்து வருகிறது.

ஆனால், அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து விமர்சித்த சிவசேனா (உத்தவ் ) எம் .பி சஞ்சய் ராவத், " ஒன்றிய அரசு கர்நாடகாவில் நந்தினி நிறுவனத்தை அளிக்க பார்த்தது போல, மராட்டியத்தில் மகானந்த் பெயரையும் அழிக்கப்பார்க்கிறது. தினமும் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்திற்கு ஒரு தொழில் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இங்குள்ள முதல்வரும், துணை முதல்வரும் வாயை மூடிக்கொண்டிருக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.

Also Read: ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழிலே தவறு... இது கூட தெரியாதா ? விமர்சிக்கும் இணையவாசிகள் !