Politics

ஆரிப் முகமதுகானை உடனே திரும்ப பெற வேண்டும் : குடியரசு தலைவருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்!

இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் இழுத்தடித்து அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

இப்படி மசோதாக்களுக்கு மட்டுமின்றி பல்வேறு இடைஞ்சல்களை ஆளுநர் மாநில அரசுகளுக்கு கொடுத்து வருகிறார். இதனை எதிர்த்து தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள், அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இதன் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்வி கேட்டு குட்டு வைத்துள்ளது.

இருந்தாலும் ஆளுநர்கள் தொடர்ந்து மாநில அரசுகளுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தியே வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநில ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "மாநிலத்தின் அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் ஆத்திரமூட்டும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது என்ற தோற்றத்தை உருவாக்க ஆளுநர் விரும்புகிறார். ஆளுநரின் நடவடிக்கைகள் மாநில அரசின் நிர்வாகத்தை சீர்குலைப்பதாக உள்ளது. இதனால் கேரள ஆளுநர் ஆரிப் கானை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஒன்றிய அரசின் பேரிடர் நிதி : செய்தியாளர் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த விரிவான விளக்கம் !