மு.க.ஸ்டாலின்

ஒன்றிய அரசின் பேரிடர் நிதி : செய்தியாளர் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த விரிவான விளக்கம் !

சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள், குடிநீர்த் திட்டங்கள், மருத்துவமனைகள், பல்வேறு கட்டடங்கள் போன்றவற்றை சீரமைப்பதற்கும் பெரும் நிதி தேவைப்படும்.

ஒன்றிய அரசின் பேரிடர் நிதி : செய்தியாளர் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த விரிவான விளக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனமழை பெய்தது. இதில் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று சென்னை மாநில கட்டுப்பட்டு மையத்தில் இருந்து வெள்ளம் பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, மற்றும் நெல்லை மாவட்டத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரமும், தென்காசி, குமாரி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000-மும் நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ஒன்றிய அரசால் கொடுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை… இதுவரை ஒன்றிய அரசிடம் இருந்து நிதி உடனே கிடைக்கும். ஆனால் இந்த மழை வெள்ளத்திற்கு இதுவரையில் நிதி எதுவும் அறிவிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அதற்கு முதலமைச்சர் அளித்த பதில் பின்வருமாறு :

ஒன்றிய அரசின் பேரிடர் நிதி : செய்தியாளர் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த விரிவான விளக்கம் !

"ஒரு நீண்ட விளக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் சொல்லிக்கொள்கிறேன். நல்ல கேள்வி கேட்டிருக்கிறீர்கள். நான் எதிர்பார்த்திருந்த கேள்வி அது. ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பைப் பற்றி விளக்கம் சொல்கிறேன். இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) என்ற நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்திற்கு இந்த நிதி எவ்வளவு என்பதை ஐந்தாண்டு காலத்திற்கு ஒருமுறை ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் நிதிக் குழு (Finance Commission) தீர்மானிக்கிறது.

இதன்படி, தமிழ்நாட்டினுடைய SDRF-க்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 விழுக்காட்டை, அதாவது ரூ.900 கோடியை ஒன்றிய அரசு தரவேண்டும். 25 விழுக்காட்டை, அதாவது ரூ.300 கோடியை தமிழ்நாடு அரசு ஏற்றிடவேண்டும். ஒன்றிய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைகளில் நமக்கு அளிக்கப்படுகின்றது. அதாவது இரண்டு தடவை தலா ரூ.450 கோடி நமக்கு அளிக்கப்படும். ஒரு இயற்கைப் பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்போது இந்த SDRF நிதி போதவில்லை என்றால், அந்த இயற்கைப் பேரிடரைக் கடும் இயற்கைப் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும், தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும், இவ்வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து NDRF-ல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்றுதான் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இதைத்தான் நானும் மாண்புமிகு பிரதமர் அவர்களை நேரில் சந்தித்தபோதும் வலியுறுத்தி குறிப்பிட்டிருக்கிறேன். மனுவாகவும் கொடுத்திருக்கிறேன். ஆனால் இன்று வரை இந்த இரண்டு பேரிடர்களும் கடும் பேரிடர்களாக அறிவிக்கப்படவில்லை.

ஒன்றிய அரசின் பேரிடர் நிதி : செய்தியாளர் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த விரிவான விளக்கம் !

NDRF-ல் இருந்து இதுவரை நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு வந்த ரூ.450 கோடி நிதி என்பது இந்த ஆண்டு நமது SDRF-க்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல. சவாலான நிதிநிலைச் சூழல் இருக்கும் போதிலும், ஒன்றிய அரசு இந்தக் கூடுதல் நிதி தராத போதிலும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு நிதியைச் செலவிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

சென்னையில் நிவாரண உதவிக்கும் மீட்புப் பணிகளுக்கும் ரூ.1500 கோடிக்குக் கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. நான் இன்று இங்கு அறிவித்துள்ள நிவாரண உதவிகளுக்கும், பணிகளுக்கும் ரூ.500 கோடிக்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள், குடிநீர்த் திட்டங்கள், மருத்துவமனைகள், பல்வேறு கட்டடங்கள் போன்றவற்றை சீரமைப்பதற்கும் பெரும் நிதி தேவைப்படும்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் அதே நேரத்தில், இந்த வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பாக சாலைகள், மருத்துவமனைகள், பாலங்கள், மின்கட்டமைப்புகள் ஆகியவற்றை சீர்செய்யும் பணிக்காக தமிழ்நாடு அரசு உடனடி முன்பணமாக மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ.250 கோடியை விடுவிக்க ஆணையிட்டுள்ளேன். அதோடு மேலும் தாமதமின்றி இந்த இரண்டு பேரிடர்களையும் கடும் பேரிடர்களாக அறிவித்து ஒன்றிய அரசு NDRF-ல் இருந்து கோரப்படுள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் சார்பிலும் தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்."

banner

Related Stories

Related Stories