Politics

தந்தை பெரியார் பற்றி அவதூறு செய்த உ.பி பெண்..மன்னிப்பு கேட்டு பெரியாரை படிப்பேன் என கூறக் காரணம் என்ன ?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தந்தை பெரியார் எழுதிய 'இராமாயணக் கதாபாத்திரங்களின் உண்மை' என்ற நூலின் ஹிந்தி பதிப்பான 'சச்சி ராமாயண்' என்ற நூல் குறித்து உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.

அப்போது அவர் பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய நிலையில், அவர் குறித்து உ.பி-யை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த நிலையில், இந்த நிகழ்வைக் குறிப்பிட்டு விடுதலை இதழில் தலையங்கள் வெளியாகியுள்ளது. அந்த தலையங்கம் வருமாறு :

தந்தை பெரியார்பற்றி அவதூறும் - மன்னிப்பும்

சமூக வலைதளங்களில் நூல்கள் குறித்து விமர்சனம் செய்துவரும் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சோனம் என்ற பெண் தந்தை பெரியாரின் 'இராமாயணக் கதாபாத்திரங்களின் உண்மை' என்ற நூலின் ஹிந்தி பதிப்பான 'சச்சி ராமாயண்' என்ற நூல் குறித்து விமர்சனம் செய்யும்போது, இந்த நூலை எழுதியவர் ”அசிங்கத்தைத் தின்றுவிட்டு, மீண்டும் தெளிவாக கூறுகிறேன் அசிங்கத்தைத் தின்றுவிட்டு” என்று எழுதியுள்ளார். தந்தை பெரியாரையும் அதை ஹிந்தியில் மொழிபெயர்த்த பெரியார் லலாய் சிங்கையும் மோசமாகப் பேசி 20.09.2023 அன்று பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அவரது இந்தப் பதிவிற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக லலாய் சிங்கின் மருமகனும் நாடகம் மற்றும் தெருக்கூத்து மூலம் பகுத்தறிவுப் பரப்புரை செய்துவருபவருமான ஏ.கே. சிங், கான்பூரைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அர்ஜக் சங் அமைப்பு, மற்றும் சமாஜ்வாடி கட்சி போன்றவை தந்தை பெரியார், லலாய் சிங் ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய பெண்ணிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சமூகவலை தளங்கள் வாயிலாக உத்தரப்பிரதேச காவல்துறைக்கு புகார்களை தெரிவித்திருந்தன.

sacchi ramayan

இந்த நிலையில், 2209.2023 அன்று சமூகவலை தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட சோனம் என்ற அந்தப் பெண், ”நான் சின்னப் பெண், மனிதர்களிடம் தவறுகள் நேர்வது இயல்புதான், என்னால் தவறு நேர்ந்து விட்டது; இனி இதுபோல் நடக்காது. தந்தை பெரியார் குறித்து சமூகத்தில் பலர் மிகவும் மரியாதை வைத்துள்ளனர். அவர்களின் மனதை நான் புண்படுத்திவிட்டேன். எனது மனம் மிகவும் வேதனை அடைந்துள்ளது. இதற்கு முன்பு நான் இப்படி பேசியது இல்லை . இது என்னை சமூகவலைதளத்தில் பின் தொடரும் அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் எனக்கு இந்த நூலைக் கொடுத்தவர் தவறான தகவலைச் சொல்லிக் கொடுத்தார். நான் நூலைப் படிக்கும் முன்பாகவே இவ்வாறு பேசிவிட்டேன். தற்போது இந்த நூலைப் படிக்கத் துவங்கிவிட்டேன், பலரது மன வருத்தத்திற்கு நான் காரணமாகிவிட்டேன்" என்று குரல் பதிவில் கூறி இருந்தார்.

இந்த நிலையில் ஹிந்தி ஊடகவியலாளரான நிர்தேஷ் என்பவருக்கு சோனம் எழுதிய சமூகவலைதளப் பதிவில், "இத்தனைப் பேரின் மதிப்பிற்குரியவரை(பெரியார்) நான் தவறாக பேசிவிட்டேன், நான் மீண்டும் இதன் மூலமாக மன்னிப்புக் கேட்கிறேன். எனக்கு இந்த நூலைக் கொடுத்தவர், சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதனால்தான் நான் அப்படி பேசினேன். இன்னும் நான் இந்த நூலைப் படிக்கவில்லை. இவர்(தந்தை பெரியார்) மற்றும் டாக்டர் அம்பேத்கர் குறித்து இனி அதிகம் படிப்பேன். அவர்களின் கருத்துகளை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்.

என்னை அறியாமல் ஒரு வேகத்தில் தவறு நடந்துவிட்டது, மன்னித்துவிடுங்கள்.உண்மையில் அவரது கொள்கைகளைப் (பெரியாரை) பின்பற்றும் அதிகப்படியானவர்களின் மன்னிப்பிற்கு நான் தகுதியானவள் அல்ல, இருப்பினும் எனது உளப்பூர்வ மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்" என்று எழுதியுள்ளார்.தந்தை பெரியார் உலகத்திற்கே வழிகாட்டும் ஒப்பற்ற தலைவர்-உயர் சிந்தனைகள் மலரும் சோலைஉண்மையும், அறிவு நாணயமும் அவரின் இருவிழிகள்!

"மண்டைச் சுரப்பை உலகு தொழும்" என்று தந்தை பெரியார் பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1958) கூறினார். இன்றைக்கு உலகில் பல நாடுகளிலும் அவர்தம் அறிவியல் ரீதியான தொலைநோக்குச் சிந்தனைகள் பேசு பொருளாக இருக்கின்றன. உ.பியில் அவதூறாக அய்யாவைப்பற்றி சமூக வலை தளத்தில் பதிவிட்ட பெண், உண்மை உணர்ந்து பகிரங்க மன்னிப்புக் கேட்டது வரவேற்கத்தக்கது.

தந்தை பெரியாரின் இராமாயண பாத்திரங்கள் ஹிந்தியில் 'சச்சி இராமாயண்' என்று மொழிபெயர்க்கப்பட்டு, முதலில் தடை செய்யப்பட்டது உண்மைதான் - உச்சநீதிமன்றம் அந்தத் தடையை நீக்கியது என்ற வரலாற்று உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.தந்தை பெரியாரின் நூல்களுக்கோ, அவர்தம் கொள்கை வழி நாளும் தடம் பதிக்கும் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களின் நூல்களுக்கோ இதுவரை எவராலும் ஒரு வரி மறுப்புக்கூட எழுத முடியவில்லை என்பது நினைவில் இருக்கட்டும்! காரணம் அனைத்தும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவையே!

Also Read: பாஜகவோடு கூட்டணி.. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியிலிருந்து விலகும் முக்கிய தலைவர்கள்.. கர்நாடகாவில் பரபரப்பு