Politics

இஸ்லாமிய மாணவரை தாக்க கூறிய ஆசிரியை.. உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா? உ.பி அரசுக்கு நீதிமன்றம் கேள்வி !

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இம்மாநிலத்தில் தொடர்ச்சியாக இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதல் மற்றும் வெறுப்பு பேச்சு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அங்கு அதிகரித்த வண்ணம் உள்னன.

அங்கு சில நாட்களுக்கு முன்னர் பள்ளி ஒன்றில் ஆசிரியரே இந்து மாணவர்களிடம் இஸ்லாமிய மாணவனை தாக்கச் சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இது குறித்து வெளியான வீடியோவில் இஸ்லாமிய மாணவர் ஒருவர் நிற்கிறார். அந்த மாணவரை அடிக்குமாறு ஆசிரியர் கூறியவுடன் முதலில் ஒரு சிறுமி அந்த மாணவரை அடிக்கிறார். அதன்பின்னர் அடுத்தடுத்து பிற மாணவர்கள் அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் முசாபர் நகரில் செயல்பட்டுவரும் பள்ளி ஒன்றில் நடந்துள்ளது. இஸ்லாமிய மாணவரை அடிக்குச் சொல்லும் ஆசிரியர் பெயர் திருப்தா தியாகி. மாணவர்கள் மத்தியில் வெறுப்பைப் பரப்பும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்து வந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இது குறித்து போதிய நடவடிக்கை எடுக்காத மாநில பாஜக அரசை நீதிபதிகள் கண்டித்தனர். இந்த வழக்கில், "குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்துக்காக ஒரு மாணவர் தண்டிக்கப்படுகிறார் என்றால், அது சரியான கல்வி முறை கிடையாது.

ஆசிரியை ஒருவர் ஒரு மாணவனை, சக மாணவர்களை வைத்து அடிக்கச் செய்த செய்தி உத்தரப்பிரதேச அரசின் மனசாட்சியை உலுக்கியிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவனுக்கும், அவரை அடித்த மாணவர்களுக்கும் முறையான கவுன்சிலிங் வழங்கி, இந்த வழக்கை மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மூலம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்"என உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: “அன்று மோர்பி.. இன்று வஸ்தாதி” : ஆற்றுக்குள் துண்டாக உடைந்து விழுந்த பாலம் - நீரில் மூழ்கி 6 பேர் மாயம் ?