Politics
சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு குரல்.. மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரத்தில் திருப்பம்.. சிக்கலில் பாஜக !
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர்.பின்னர் விசாரணைக் குழு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி கொடுக்காமல் இருந்து வருகிறது.
அதன்பின்னர் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற திறக்கப்பட்ட நிலையில், அதனை அதனை முற்றுகையிட்டு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த போலிஸார் மல்யுத்த வீரர்களை தடுத்து தரதரவென இழுத்து சென்று கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டுக்காக தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீசுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். அதன்படி தங்கள் வென்ற பதக்கங்களுடன் கங்கை நதியில் வீசக்கொண்டு சென்றபோது அங்கு இருந்த போலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் மல்யுத்த வீரர்களுடன் போராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர்களும் அவர்களின் இந்த முடிவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதன்பின்னர் பதக்கங்களை ஆற்றில் வீசும் போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் கைவிட்டு பிரிஜ்பூஷனை 5 நாட்களில் கைது செய்யவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என மல்லியுத்த வீராங்கனைகள் கெடு விதித்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவிலேயே பிரச்சனை எழுந்துள்ளது அக்கட்சி தலைமைக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா பாஜகவில் முக்கிய தலைவராக இருந்தவர் கோபிநாத் முண்டே. அந்த மாநிலத்தில் பாஜகவை வளர்த்ததில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது. இவர் கடந்த 2014-ம் ஆண்டு மரணமடைந்தார். இவரின் இரு மகள்களில் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.
பாஜக தேசிய செயலாளராக இருக்கும் கோபிநாத் முண்டேவின் மகளான பங்கஜா முண்டே, சமீபத்தில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் “ நான் பாஜகவைச் சேர்ந்தவள். ஆனால், பாஜக எனது கட்சி கிடையாது" என்று கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது பங்கஜா முண்டேவின் சகோதரி இந்த விவகாரத்தில் பாஜகவை நேரிடையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், " ஒரு பெண் புகார் கொடுத்தால், அதனை புறம் தள்ளக்கூடாது. அது எந்த அரசாகவும். கட்சியாகவும் இருக்கலாம். மல்யுத்த வீராங்கனைகளின் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் ஆளுங்கட்சியை சார்ந்தவளாக இருந்தாலும், மல்யுத்த வீராங்கனைகளுடனான முறையான பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து மூலம் பாஜகவில் பிளவு இருப்பது தெரியவந்துள்ளது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!