Politics

கூட்டுறவு வங்கிகளில் ரூ.1000 கோடி அளவு மோசடி.. சிக்கும் பாஜக தலைகள்.. பரபரப்பில் கர்நாடக அரசியல் !

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் சில நாட்களில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்த கூட்டுறவு வங்கிகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் வந்த நிலையில், வருமான வரி அதிகாரிகள் வங்கிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

16 இடங்களில் நடந்த இந்த சோதனையில் மோசடி தொடர்பான ஆவணங்கள், கணக்கில் வராத பணம் ரூ.3.3 கோடி கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளும் வருமான வரித்துறை சோதனைகளில் கைப்பற்றப்பட்ட நிலையில், வங்கிகளில் காசோலையை பயன்படுத்தி ஏராளமான மோசடிகள் நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

இது தவிர, சில வாடிக்கையாளர்களுக்கு ரூ.15 கோடி அளவுக்கு கணக்கில் காட்டாமல் கடன் வழங்கியதும் மோசடியாக கூட்டுறவு சங்கங்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம், வைப்புத் தொகையாக போடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பெயர்கள் சிக்கியுள்ளது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Also Read: சட்டவிரோதமாக மணல் அள்ளிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ : வழிமறித்து அதிரடி காட்டிய வாடிப்பட்டி போலிஸார்!